நாட்டிங்காம்: இந்திய அணியில் சமீப காலமாக, ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். வீரர்களை ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றி வருவதால் அவர்கள் மனதளவில் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அது போன்ற விமர்சனங்கள் “மிகவும் வினோதமான எண்ணம்” என கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி.
கோஹ்லியின் தலைமையில் இந்தியா 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதே சமயம், டெஸ்ட் போட்டி அணியில் 37 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நிலையான வீரர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். கோஹ்லியின் தலைமையில் ஆடிய போட்டிகள் அனைத்திலும் பங்கேற்ற ஒரே வீரர் கோஹ்லிதான் என சொல்லும் அளவுக்கு இருப்பதால், இந்த நடைமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.