மிரட்டல் பந்து வீச்சுக்கு மத்தியில்
அந்த சமயத்தில் பாகிஸ்தான் அணியின் மிரட்டல் பந்து வீச்சாளர்களாக சோயிப் அக்தர், சக்லைன் முஷ்டாக் ஆகியோர் இருந்தனர். ஆனால் அவர்களது பந்துகளை நையப்புடைத்து விட்டார் ஷேவாக். அவர்களை அடித்து விரட்டி தனது முச்சதத்தை அவர் எடுத்தது அவராலும் கூட வாழ்க்கையில் மறக்க முடியாதது. மைதானம் முழுக்க பந்துகளைப் பறக்க விட்டார் ஷேவாக். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும்கூட அவர்களால் ஷேவாக்கை நிறுத்த முடியவில்லை.
ஸ்பின் பவுலிங்கும் வீண்
வேகப் பந்து வீச்சாளர்கள் தோல்வி அடைந்த நிலையில் ஸ்பின் அட்டாக்கை கையில் எடுத்தார் கேப்டன் இன்சமாம் உல் ஹக். ஆனால் அதுவும் எடுபடாமல் போய் விட்டது. ஸ்பின்னர்களையும் பதம் பார்த்தார் ஷேவாக். முதல் 100 ரன்களை படு வேகமாக குவித்த ஷேவாக் அதன் பிறகும் வேகம் குறையாமல் வெளுத்தெடுத்தார். பாகிஸ்தான் பந்து வீச்சை தவிடுபொடியாக்கி தன்னை நிரூபித்தார். முதல் நாள் ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தின்போது 100 ரன்களைக் குவித்த அவர் 2வது நாளின் பாதி ஆட்டத்திற்குள் தனது டபுள் செஞ்சுரியை முடித்தார்.
2வது நாளிலும் தொடர்ந்து அதிரடி
2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து 228 ரன்களுடன் தொடர்ந்து, படு வேகமாக தனது முச்சதத்தைப் போட்டு பாகிஸ்தானை தெறிக்க விட்டார். இந்திய ரசிகர்களை குதூகலப்படுத்தினார். முச்சதத்தை நெருங்கியபோதும் கூட அவர் தனது அதிரடியைக் கைவிடவில்லை. பயப்படவில்லை. தொடர்ந்து அட்டகாசமாக ஆடினார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. 295 ரன்களில் இருந்தபோது முஷ்டாக்கின் பந்தை சிக்சருக்கு விளாசி வரலாறு படைத்தார் ஷேவாக்.
இந்தியாவுக்குக் கிடைத்த அபார வெற்றி
இந்தப் போட்டியின்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 675 ரன்களைக் குவித்தது. பந்து வீச்சைப் போலவே பேட்டிங்கிலும் கோட்டை விட்டது பாகிஸ்தான். இதனால் இப்போட்டியில் இன்னிங்ஸ், 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த முச்சதம் ஷேவாக்குக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டுக்கும் உலக அரங்கில் புது அங்கீகாரத்தைக் கொடுத்தது.
ஷேவாக் மட்டுமே சாதனையாளர்
இதே ஷேவாக் 2008ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 2வது முச்சதத்தைப் போட்டார். நீண்ட காலம் வரை இந்த முச்சதங்கள்தான் ஒரே இந்திய சாதனையாக இருந்து வந்தது. இருப்பினும் 2016ம் ஆண்டு இளம் வீரரான கருண் நாயர் முச்சதம் போட்டு ஷேவாக்குடன் இணைந்தார். இருப்பினும் அதிக முறை முச்சதம் அடித்த ஒரே வீரராக இன்று வரை ஷேவாக்தான் நீடித்து வருகிறார்.