2010 ஆசிய கோப்பை
2010 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் மோதின. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி நல்ல துவக்கம் பெற்றாலும் 29வது ஓவர் முதல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டை இழந்தது.
பாக். ஸ்கோர்
49.3 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 267 ரன்களே எடுத்தது. இந்தியாவுக்கு இந்த இலக்கு எளிதாக கருதப்பட்டது. காரணம், இந்திய அணியில் அப்போது கம்பீர் முதல் ஜடேஜா வரை ஏழு பேட்ஸ்மேன்கள் இருந்தனர்.
இந்தியா தடுமாற்றம்
அடுத்து ஆடிய இந்திய அணியில் சேவாக் 10, கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கம்பீர் 83, தோனி 56 ரன்கள் கடந்து ஆட்டமிழந்தனர். இந்தியா 45.1 ஓவரில் 219 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்து இருந்தது. சுரேஷ் ரெய்னாவுடன் பேட்டிங் செய்ய ஹர்பஜன் களமிறங்கினார்.
47வது ஓவர்
47வது ஓவரை சோயப் அக்தர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்பஜன் சிக்ஸ் அடித்தார். இந்தியா அப்போது 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது சிக்ஸ் அடித்ததால் அக்தர் கடும் கோபம் அடைந்தார். ஹர்பஜனை சீண்டினார்.
நீடித்த சண்டை
பின்னர் ரெய்னா - ஹர்பஜன் சிங் ஜோடி தொடர்ந்து ரன் குவித்தது. 49வது ஓவரை அக்தர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை பெரிய பவுன்சராக வீசி ஹர்பஜன் சிங்கால் பந்தை அடிக்க முடியாதபடி செய்தார் அக்தர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக் கொண்டனர். அம்பயர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து வைத்தனர்.
இந்தியா வெற்றி
பின்னர் கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரெய்னா ஆட்டமிழந்தார். கடைசி இரண்டு பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், முகமது ஆமிர் பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் ஹர்பஜன் சிங்.
அக்தர் கோபம்
அந்தப் போட்டிக்கு பின் சோயப் அக்தர் கடும் கோபத்துடன் ஹர்பஜன் சிங்கை அவரது அறைக்கே சென்று அடிக்கப் போகிறேன் என கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால், ஹர்பஜன் சிங் அப்போது அறையில் இல்லை. அதனால், அன்று பெரிய மோதல் நடக்காமல் போனது.
தப்பித்த ஹர்பஜன் சிங்
உண்மையில் ஹர்பஜன் சிங் சோயப் அக்தர் வருவதை அறிந்து அறையில் தங்காமல் வேறு எங்கோ சென்றுள்ளார். அதனால் தான் அன்று அவர் தப்பினார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அதே போல, தான் ஏன் அன்று கோபம் அடைந்தேன் என அக்தரும் விளக்கம் அளித்துள்ளார்.
என்ன காரணம்?
சோயப் அக்தர் கூறுகையில், ஹர்பஜன் சிங் ஒரு பஞ்சாபி சகோதரர். அவர் லாகூரில் எங்களுடன் சாப்பிட்டுள்ளார், எங்களுடன் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். அதன் பின்னும் அவர் எங்களுடன் தவறாக நடந்து கொள்வாரா? என எ எனக்கு கோபம் வந்தது. அதனால், தான் அன்று ஹோட்டல் அறைக்கு சென்றேன் என்றார்.
ஹர்பஜன் என்ன சொன்னார்?
ஹர்பஜன் சிங் இந்த சம்பவம் பற்றி ஒருமுறை கூறுகையில், அக்தர் என்னை அடிக்கப் போவதாக ஒரு முறை கூறினார். நான் அவருக்கு சவால் விட்டேன். ஆனால், எனக்கு பயமாக இருந்தது. அவர் பெரிய பலசாலி. அவரை பிடிக்கவே முடியாது என்றார்.