ரியோ டி ஜெனிரோ: நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை எந்த பதக்கத்தையும் வெல்ல முடியாத நிலையில் இன்று முக்கியமான சில போட்டிகளை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள உள்ளனர்.
இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகள் எவை என்று ஒரு பார்வை இதோ:
ஆடவருக்கான, 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி, மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. பிரகாஷ் நஞ்சப்பா பங்கேற்கிறார். இறுதி போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
வில் வித்தையில், 1/32 எலிமினேட்டர் ஒற்றையர் பிரிவில் மாலை 6.09 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியாவின் பொம்பயாலா தேவி, ஆஸ்திரியாவின் லாரன்ஸ் பால்டஃப்பை எதிர்கொள்கிறார்.
நாளை அதிகாலை 1.27 மணிக்கு நடைபெறும் பெண்கள் ஒற்றையர் 1/32 எலிமினேட்டர் சுற்றில், தீபிகா குமாரி, ஜார்ஜியாவின் கிரிஸ்டினே இசபுவாவை சந்திக்கிறார்.
ஆடவருக்கான குரூப் 1, 77 கிலோ பிரிவு பளு தூக்கும் போட்டி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. அதிகாலை 2.30 மணிக்கு, ஆடவருக்கான குரூப் ஏ பிரிவு 77 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டி நடக்கிறது.
இரவு 7.17 மணிக்கு நடைபெறும் ஜூடோ போட்டியில், இந்தியாவின் அவதார் சிங், அகதிகள் ஒலிம்பிக் அணியின் போபோல் மிசென்காவை சந்திக்கிறார்.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மகளிர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் ஆடவர் லைட் வெயிட் (64 கிலோ), பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மனோஜ்குமார், லிதுனானியாவின் எவல்தாசை எதிர்கொள்கிறார்.