ஆசிய விளையாட்டுப் போட்டி கபடி..... இந்தியாவின் தங்க வேட்டை தொடருமா!
டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி பிரிவில் இந்தியாவே இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆடவர் பிரிவில் 7 முறையும் மகளிர் பிரிவில் 2 முறையும் இந்தியாவே பதக்கம் வென்றுள்ளது. ஜகார்த்தாவிலும் அது தொடருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆகஸ்ட் 18ல் துவங்குகிறது. இதில் கபடி பிரிவு போட்டிகள் ஆகஸ்ட் 19 முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆடவர் பிரிவில் 1990ல் இருந்தும், மகளிர் பிரிவில் 2010ல் இருந்தும் கபடி போட்டிகள் நடத்தப்படுகின்றன.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள 12 ஆடவர் அணிகள் மற்றும் 9 மகளிர் அணிக்களை சர்வதேச கபடி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

12 ஆண்கள் அணிகள்
ஆடவர் பிரிவில் இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், ஜப்பான், கொரியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய 12 அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் முறையாக 12 அணிகள் பங்கேற்க உள்ளன.

மகளிர் பிரிவில் யார் யார்
மகளிர் பிரிவில் இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், ஈரான், ஜப்பான், கொரியா, இலங்கை, தாய்லாந்து, சீன தைபே ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன. மகளிர் பிரிவிலும் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான அணிகள் பங்கேற்க உள்ளன.

அனைத்தும் இந்தியாவுக்கே
ஆடவர் கபடி பிரிவில் இதுவரை நடந்துள்ள 7 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாவே தங்கம் வென்றுள்ளது. அதேபோல் மகளிர் பிரிவில் நடந்த இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாவே தங்கம் வென்றுள்ளது.

தங்கம் கிடைக்குமா
இந்த முறையும் ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் தங்கத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் சில அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. மேலும் சில முக்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதனால் முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் போல சுலபமாக தங்கம் கிடைக்காது. சற்று போராட வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications