கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கின.
20 வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா பாரம்பரியமிக்க செல்டிக் பாரக் மைதானத்தில் நடைபெற்றது.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளைச் சேர்ந்த 71 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அடுத்த மிகப்பெரிய போட்டியாகும்.
உற்சாகப் பாடல்
இங்கிலாந்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகை கரென் டன்பார் பாடிய, வெல்கம் டு ஸ்காட்லாந்து என்ற உற்சாகமான பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அவருடன் பிரபல நடிகர் ஜான் பாரோமேன் குழுவினரும் இணைந்து நிகழ்ச்சிக்கு உயிரூட்டினர்.
ராணி எலிசபெத்துக்கு வரவேற்பு
ஸ்காட்லாந்தின் பிரபல பாடகர் சூசுன் பாயல், காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ராணி எலிசபெத்தை வரவேற்றுப் பாடினார்.
கண்ணுக்கு விருந்து
ராணி எலிசபெத்தை காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் தலைவர் துங்கு இம்ரான் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். ஸ்காட்டிஷ் படை வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி ராணி எலிசபெத்தை வரவேற்க, மைதானத்துக்கு மேலே ஒன்பது விமானங்கள் பறந்து கண்களுக்கு விருந்து படைத்தன.
விளையாட்டு ஜோதி
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஜோதி வான்வெளியில் பறந்து வந்தது. பல்வேறு நாடுகளிலும் சுற்றி வந்த ஜோதியை, ஸ்காட்லாந்தின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் மார்க் பீமன்ட் மினி ஜெட் விமானத்தின் மூலம் அரங்கத்திற்கு கொண்டு வந்தார்.
இந்தியா வீரர்கள்
பின்னர் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்கள் அணிவகுத்து வந்தனர். இதில் முதலாவதாக இந்திய வீரர்கள் தேசியக் கொடியுடன் அணி வகுத்து வலம் வந்தனர்.
தேசியக்கொடி ஏந்திய விஜயகுமார்
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர் விஜயகுமார் தேசியக் கொடியை ஏந்தி வர பாலிவுட் இசைப் பின்னணியில் இந்திய வீரர்கள் அணி வகுத்து வந்தனர்.
ஆகஸ்ட் 3 வரை
போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பார்வையாளர்கள் என சுமார் எட்டாயிரம் பேர் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர். ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா உட்பட 71 நாடுகள் பங்கேற்கின்றன.
யாருக்கு முதலிடம்
11 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் முதலிடத்தைப் பிடிப்பதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பதக்க கனவு
இந்தியாவுக்கும், 265 பேருடன் களமிறங்கும் கனடாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 101 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்த இந்தியா சார்பில் இந்த முறை 215 வீரர், வீராங்கனைகள் 14 பிரிவுகளில் பங்கேற்கின்றனர். கடந்த முறை துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்த போட்டிகளில் இந்தியா பதக்கங்களைக் குவித்த சில பிரிவுகள் நீக்கப்பட்டுவிட்டன. இது இந்தியாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
எத்தனை பதக்கங்கள்
இதேபோல் கடந்த முறை வில்வித்தை மற்றும் டென்னிஸில் இந்தியா 12 பதக்கங்களை அள்ளியது. ஆனால் இந்த முறை அந்த இரு போட்டிகளும் இடம்பெறவில்லை. துப்பாக்கி சுடுதலைப் பொறுத்தவரை கடந்த முறை 30 பதக்கங்கள் கிடைத்தன. இந்த முறை சில பிரிவுகள் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தியா 60 பதக்கங்களை வென்றாலே அது சாதனையாக அமையும் என தெரிகிறது.