ஹைதராபாத்: வெள்ளி மங்கை சிந்து யாருக்கு மகள்.. ஆந்திர மாநிலத்திற்கு மகளா... தெலுங்கனாவின் பெண்ணா... சண்டை போட்டுக் கொள்கிறார்கள் இரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள்...
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ள சிந்துவிற்கு வந்த சோதனை இது. பேட்மிண்டனில் இந்தியா வெள்ளி வென்றது என்று உலகமே சொல்கிறது... ஆனால் தெலுங்கனாவைத் சேர்ந்தவர்களும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சிந்து தங்களுக்குத்தான் சொந்தம் என்று சண்டையை கிளப்பிவிட்டிருக்கின்றனர்.
இதில் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிட முடியாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் இப்போது சிந்து எந்த ஜாதி என்று தேடிக் கொண்டிருக்கின்றனர் இரு மாநிலத்தவரும்.
இதில் வேடிக்கை என்ன வென்றால் சிந்து பெற்றோரான ரமணாவும் விஜயலஷ்மியும் காதல் திருமணம் புரிந்தவர்கள். அதே போல சிந்து பிறந்தது செகந்திராபாத். வசிப்பது மாரட்பள்ளி. அவரது தந்தை ரமணா பிறந்தது தெலுங்கனாவில் உள்ள அடிலாபாத்; தாய் விஜயலஷ்மி ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள்.
இதில் சிந்து எந்த மாநிலத்தூக்கு சொந்தம் என்பதை யார் கண்டுபிடிப்பது? இதுகுறித்து சிந்துவின் தாயிடமே செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு விஜயாலஷ்மி, "என் மகள் முதலில் இந்தியப் பெண். அவள் வெற்றி பெற்றுள்ள இந்தத் தருணத்தை கொண்டாடுவோம். இதுபோன்ற விவாதத்திற்கு முற்று புள்ளி வைப்போம்" என்று கூறி அனைவரின் வாயையும் அடைத்துள்ளார்.