பேட்மிண்டன் குடும்பம்
ஆந்திராவில் பிறந்த ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஒரு பேட்மிண்டன் குடும்பத்தை சேர்ந்தவர். ஸ்ரீகாந்தின் மூத்த சகோதரர் ஒரு பேட்மிண்டன் வீரர். அண்ணனை பார்த்து வளர்ந்த ஸ்ரீகாந்த் கிடாம்பி,கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் இணைந்தார். சாய்னா, பி.வி.சிந்து என இருவரையும் பட்டை தீட்டிய கோபிசந்த் தான் ஸ்ரீகாந்த் கிடாம்பியையும் செதுக்கினார்.
ஜூனியர் சாம்பியன்
2011ஆம் ஆண்டு தனது 18வது வயதில் காமன்வெல்த் யூத் கேம்ஸ்,தொடரில் விளையாடிய ஸ்ரீகாந்த்,கலப்பு இரட்டையர் வெள்ளி, இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார். இதனைத் தொடர்ந்து தேசிய அளவில் நடைபெற்ற ஜூனியர் பேட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த் கிடாம்பி சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதல் வெற்றி
2012ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டு தொடரில் ஸ்ரீகாந்த் கிடாம்பி மலேசிய இண்டர்நேஷனல், தாய்லாந்து ஓபன் கிராண்ட் பிரீ ஆகிய குறிப்பிட தகுந்த வெற்றிகளை பெற்றார். மேலும் அதே ஆண்டு தேசிய சீனியர் பேட்மிண்டன் தொடரில் கஷ்யாப்பை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சாதனை வெற்றி
2014ஆம் ஆண்டு சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை ஸ்ரீகாந்த் வென்றார். அதுவும் 5 முறை உலக சாம்பியன், அப்போதைய ஒலிம்பிக் சாம்பியன் லீன் டானை வீழ்த்தினார் ஸ்ரீகாந்த். இதன் மூலம் ஸ்ரீகாந்த் அனைவரின் கவனத்தையும் பெற்று நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.இதன் மூலம் சூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதே போன்று 2015ஆம் ஆண்டு இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ், இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் ஸ்ரீகாந்த் கிடாம்பி
ஒலிம்பிக் ஏமாற்றம்
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சிந்துவை போல் ஸ்ரீகாந்த் கிடாம்பியும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் காலிறுதி வரை முன்னேறி பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.2017ஆம் ஆண்டில் ஸ்ரீகாந்த் கிடாம்பி மீண்டும் உச்சம் தொட்டார். அந்த ஆண்டில் 4 சூப்பர் சீரிஸ் பட்டத்தை ஸ்ரீகாந்த் கிடாம்பி வென்றார்.
உலகின் நம்பர் 1
2018 காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி பதக்கம் வென்றார். அதே ஆண்டில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார் ஸ்ரீகாந்த் கிடாம்பி. அதன் பிறகு, சறுக்கலை சந்தித்த ஸ்ரீகாந்த் கிடாம்பி காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடமல் இருந்தார். இதனால் டோக்யோ ஒலிம்பிக்கில் இவர் விளையாடவில்லை.
உலக சாம்பியன்ஷிப்
தற்போது 2021 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த தொடரின் வரலாற்றில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.