டெல்லி: உலக பாட்மின்டன் கூட்டமைப்பு இந்தாண்டுக்கான போட்டிகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டிகள், ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலக பாட்மின்டன் கூட்டமைப்பு அங்கீகாரம் பெற்ற பல்வேறு போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இந்த ஆண்டு சூப்பர் சீரியஸ் மற்றும் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளுக்கு பதிலாக ஐந்து நிலைகள் கொண்ட உலகச் சுற்று போட்டி, சீனாவின் குவாங்சுவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி, 2018 முதல் 2021 வரை நடைபெறும்.
உலக பாட்மின்டன் கூட்டமைப்பை வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணையின்படி, ஜனவரி 9ம் தேதி பாங்காக்கில் தாய்லாந்து மாஸ்டர்ஸ் போட்டியுடன் துவங்குகிறது. டிசம்பர் 12-16ல் குவாங்சுவில் உலகச் சுற்று பைனல்ஸ் போட்டியுடன் முடிவடைகிறது.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் இந்தியா ஓபன் போட்டி, இந்தாண்டு ஜனவரியிலேயே நடக்கிறது. டில்லி சிரிபோர்ட் மைதானத்தில், வரும், 30ம் தேதி துவங்கி, ஜன.4ம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்தாண்டு நடந்த இந்தியா ஓபன் போட்டியில் ஆடவர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் அலெக்சன் சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் பி.வி. சிந்து பட்டம் வென்றார்.
2015ல் ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், மகளிர் பிரிவில் சாய்னா நெஹ்வால் பட்டம் வென்றனர். 2010ல் மகளிர் பிரிவில் சாய்னா நெஹ்வால், கலப்பு இரட்டையரில் வலியவீட்டில் டிஜு, ஜூவாலா கட்டா ஜோடி பட்டம் வென்றனர்.
2017ல் நடந்த 13 சூப்பர் சீரியஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு, 7 பட்டம் கிடைத்தது. கிடாம்பி ஸ்ரீகாந்த் நான்கு பட்டங்களும், பி.வி.சிந்து 2 பட்டங்களும், சாய் பிரனீத் ஒரு பட்டமும் வென்றனர்.
இதில் ஸ்ரீகாந்த், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஓபன் பட்டங்களை வென்றதுடன், உலகத் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார்.
பி.வி. சிந்து, இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபன் ஆகிய இரண்டு சூப்பர் சீரியஸ் பட்டங்களும், ஒரு கிராண்ட் பிரிக்ஸ் பட்டமும் வென்றார். அதைத் தவிர, உலக சாம்பியன் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றார்.