ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் தாய்நாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, இந்த சாதனையை படைக்க 3 மாதங்கள்வரை செல்போனை துறந்தும், தனக்கு பிடித்தமான இனிப்பு தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தியாகம் செய்து, வெற்றிக்காக தவம் கிடந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பேட்மிண்டன் அரங்கில் புதிய வரலாறு படைத்த சிந்துவின் போனை திருப்பிக்கொடுப்பதே எனது முதல் வேலை என அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறியுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்திய வீராங்கணை பி.வி.சிந்தும், உலகின் நம்பர்1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினாவிடம் கடினமாக போராடி தோல்வியடைந்தார்.
தங்கத்தை தவறவிட்டாலும் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புது வரலாறு படைத்து சாதித்தார்.
கடந்த சில மாதங்களாக இதற்காக கடினமாக பயிற்சி மேற்கொண்ட சிந்துவுக்கு, தற்போது முழு சுதந்திரம் அளிக்கப்போவதாக அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கோபிசந்த், சிந்துவுக்கு கொடுத்த மிஷனை அவர் சிறந்த முறையில் முடித்து விட்டார். தற்போது மூன்று மாதத்துக்கு முன் அவரிடம் இருந்து வாங்கி வைத்திருந்த அவரது போனை திருப்பி கொடுப்பது தான் எனது முதல் வேலை. அப்போது தான் அவர் வாட்ஸ் ஆப் மூலம் அவருடைய நண்பர்களுடன் மனதுக்கு பிடித்தது போல உரையாட முடியும் என்று கூறினார்.
தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட அவருக்கு பிடிக்கும், ஆனால் கடந்த சில வாரங்களாக அவருடைய உடல் நலன்கருதி நான் அதையும் நான் நிறுத்திவிட்டேன். தற்போது தயிருடன், அவருக்கு பிடித்த ஐஸ் கிரீமும் சாப்பிட அனுமதிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கோபிசந்தின் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட சிந்து, படிப்படியாக பேட்மிண்டன் விளையாட்டுசார்ந்த தொழில்நுட்பங்களை கற்றார். பள்ளி, ஜூனியர் அளவிலான போட்டிகளில் பங்கெடுத்தார்.
சிந்துவின் முன்மாதிரி, பிடித்த பேட்மிண்டன் வீரர் எல்லாமே கோபிசந்த்தான். அவரது வார்த்தெடுப்பில் கச்சிதமான ஒரு பேட்மிண்டன் மங்கையாக 2011ம் ஆண்டில் வெளி உலகுக்கு அறிமுகம் ஆனார்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று புகழின் உச்சத்துக்கே சென்று விட்ட சிந்து, தனது குருநாதர் கோபிசந்தின் கனவையும் நனவாக்கி இருக்கிறார்.
தன் உடலை உறுதியாக வைத்துக்கொள்வதற்காக இனிப்புகளையும், சாக்லெட்டுகளையும் சிந்து தொடுவதே இல்லை. காபி குடிக்கும் பழக்கமும் கிடையாது. ஐதராபாத் பிரியாணி, சர்க்கரை கலந்த தயிர், ஐஸ் கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம்.
ஆனால், தனக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை கலந்த தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றை எல்லாம் தீவிர பயிற்சிக்காக தியாகம் செய்ததுடன், சுமார் மூன்று மாத காலம் தனது கைபேசியை கூட பயன்படுத்தாமல் ஒலிம்பிக் பதக்கத்துக்காக அவர் வாழ்ந்த தவ வாழ்வு பற்றி அவரது பயிற்சியாளரான கோபிசந்த் தற்போது குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக சிந்து செய்துவந்த பயிற்சிகள் அபாரமானவை. குறிப்பாக, கடந்தவாரம் அவரது ஆட்டத்தில் அதிகமான உத்வேகம் வெளிப்பட்டது. மிகவும் அனுபவித்தும், தனது பொறுப்பை உணர்ந்தும் தன்னிடம் உள்ள திறமையை எல்லாம் அவர் வெளிப்படுத்தினார். சிந்துவிடம் இதைதான் நான் எதிர்பார்த்தேன். அந்த வகையில் ஒரு பயிற்சியாளராக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சிந்து மிகவும் இளம்பெண்ணாக உள்ளார். இந்த போட்டியின்போது அவரிடம் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மென்மேலும் வளரக்கூடிய ஆற்றலும் அவரிடம் உள்ளது. நாட்டுக்கு பதக்கம் வாங்கி தந்ததன் மூலம் நம்மை எல்லாம் அவர் பெருமைப்படுத்தியுள்ளார்,
இழந்த தங்கப் பதக்கத்தை பற்றி நினைக்காமல், வென்ற வெள்ளிப் பதக்கத்தை நினைத்து பெருமைப்படும்படியும், இந்த இரண்டாவது இடத்தை பிடிக்க கடந்தவாரம் செய்த கடுமையான பயிற்சியை எண்ணிப் பார்க்கும்படியும் சிந்துவிடம் நான் குறிப்பிட்டுள்ளேன் என்றும் கோபிசந்த் கூறியுள்ளார்.