கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டிகள் பாட்மின்டன் போட்டியில் இலங்கையை 5-0 என்று வென்ற இந்திய அணி, இரண்டாவது சுற்றில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் வென்றது.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கின்றன. முதல் நாளில் மகளிர் பளுதூக்குதலில் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பாட்மின்டன் போட்டிகள் இன்று துவங்கின. இதில் முதல் சுற்றில் இலங்கை அணியுடன் மோதியது.
முதலில் நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் ரித்விகா ஷிவானி காடே மற்றும் பிரனவ் ஜெர்ரி சோப்ரா ஜோடி, 21-15, 19-21, 22-20 என்ற செட்களில் இலங்கையின் சச்சின் டியாஸ், திலினி பிரமோதிகா ஹென்தாஹீவா ஜோடியை வென்றது. முதல் செட்டைக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டில் தோல்வியடைந்தது.
மூன்றாவது செட் பரபரப்பான கட்டத்தை எட்டியது, 18-18, 19-19, 20-20 என இரு அணிகளும் மாறி மாறி சமநிலையை உருவாக்கின. கடைசியில் 22-20 என இந்தியா வென்றது.
அதற்கடுத்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் நம்பர் 2 இடத்தில் உள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-10 என இலங்கையின் நிலுகா கருணாரத்னேயை சுலபமாக வென்று, அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 21வது இடத்தில் உள்ள சாத்விக் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 211-14 என்ற கணக்கில் வென்று, இந்தியாவுக்கு 3-0 என முன்னிலை பெற்றுத் தந்தனர்.
பின்னர் மகளிர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கினார் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாய்னா நெஹ்வால். அவர் 21-8, 21-4 என, மதுஷிகா தில்ருஷி பெருவெலாகேவை அனாயசமாக வென்றார். அதையடுத்து இந்தியா 4-0 என முன்னிலை பெற்றது.
கடைசியாக மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்விணி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி களமிறங்கியது. அணியின் வெற்றி ஏற்கனவே உறுதி என்றாலும், இந்திய ஜோடி அபாரமாக விளையாடியது. கிட்டத்தட்ட ஒன்சைடு மேட்ச் இபோல அமைந்த அந்த ஆட்டத்தில் 21-12, 21-14 என இந்திய ஜோடி வென்றது.
இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்தியா, இரண்டாவது சுற்றில் பாகிஸ்தானை 4-0 என வென்றது. ஆடவர் இரட்டையரில் சாத்விக் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, கலப்பு இரட்டையரில் ரித்விகா ஷிவானி காடே-பிரனவ் ஜெர்ரி சோப்ரா ஜோடி, ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த், மகளிர் ஒற்றையரில் சாய்னா நெஹ்வால் வென்றனர்.