டெல்லி : 2021 ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இதுவரை இந்தியா அந்த தொடரை நடத்துவதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை. அதனால், அந்த தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிடம் இருந்து பறித்தது சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு. மேலும், தற்போது அந்த உரிமை செர்பியா நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணி பற்றி விளக்கி உள்ளது இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு. பணம் செலுத்த வழியே இல்லாததால் தான் தங்களால் பணம் செலுத்த முடியவில்லை என கூறி உள்ளது அந்த அமைப்பு.
கடந்த 2017இல் 2021 ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை இந்தியாவில் நடத்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஆனால், அந்த ஒப்பந்தப்படி இதுவரை இந்தியா போட்டிகளை நடத்தும் உரிமைக்கான பணத்தை செலுத்தவில்லை என கூறி உள்ளது உலக குத்துச்சண்டை அமைப்பு.மேலும், இந்தியாவுக்கு 500 டாலர் பெனால்ட்டி விதித்துள்ளது.
ஆனால், உண்மையில் சுவிட்சர்லாந்தில் இருக்கும் உலக குத்துச்சண்டை அமைப்பின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதனால், செர்பியாவில் இருக்கும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி உள்ளது அந்த அமைப்பு.
ஆனால், இந்தியாவில் இருந்து செர்பியாவுக்கு வங்கியில் பணம் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி பணம் செலுத்த இருந்த சிக்கல்களை உலக குத்துச்சண்டை அமைப்பு தீர்த்து வைக்காமல் உலக குத்துச்சண்டை அமைப்பு உரிமையை ரத்து செய்துள்ளதாக இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு கூறி உள்ளது.
மேலும், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெனால்ட்டி அதிர்ச்சி அளிப்பதாகவும், அதை ரத்து செய்வார்கள் என நம்புவதாகவும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தன் விளக்கத்தில் கூறி உள்ளது.