ரியோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த மொராக்கோ நாட்டு குத்துச் சண்டை வீரர் வந்த இடத்தில் இரண்டு பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். தான் போட்டியில் பங்கேற்க மட்டுமாவது அனுமதிக்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை பிரேசில் நாட்டு சட்ட அமைச்சகம் நிராகரித்து விட்டது. இதனால் அவர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது.
மொராக்கோவைச் சேர்ந்தவர் ஹசன் சத்தா. இவர் குத்துச் சண்டை வீரர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ரியோ வந்திருந்தார். வந்த இடத்தில் இரு தினங்களுக்கு முன்பு இவர் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்களை தனது அறைக்கு அழைத்தார். அங்கு வைத்து அவர்களின் உடம்பில் கண்ட இடத்தில் கையை வைத்து சேட்டை செய்துள்ளார்.
அறையில் சக வீரர்கள் இருந்தும் கூட அவர்கள் அதைத் தட்டிக் கேட்கவில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற இரு பெண்களும் அங்கிருந்து தப்பி வெளியேறி பின்னர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக போலீஸார் ஹசனைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்து விட்டனர். இதனால் மொராக்கோ அணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹசன் தனது போட்டியில் பங்கேற்க மட்டுமாவது அனுமதிக்க வேண்டும் என்று பிரேசில் நாட்டு சட்டத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஹசனும் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார். அந்த நாட்டு அமைச்சகம் அதை ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஹசனால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.