உச்சநீதிமன்றம் தடையில்லை
ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்காதது நல்ல விஷயம். திட்டமிட்டபடி பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடைபெறும். உச்ச நீதிமன்றம்தான் எல்லாவற்றுக்கும் மேலான நீதிமன்றம். இந்த ஏலம் குறித்து உச்ச நீதிமன்றம் சில கருத்துகளைத் தெரிவிக்கும். அதுவரை காத்திருக்க வேண்டும் என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
513 வீரர்கள் பங்கேற்பு
7வது ஐபிஎல் போட்டியில் 513 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏலத்துக்காக 10 நாடுகளைச் சேர்ந்த 233 வீரர்களின் பட்டியலை இறுதி செய்த ஐபிஎல் அமைப்பு, அது தொடர்பான விவரங்களை போட்டியில் விளையாடும் 8 அணிகளின் நிர்வாகத்திடமும் கொடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் 46 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அடிப்படை விலை ரூ. 2 கோடி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்துக்கு இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக், பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, ஆசிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி, ராபின் உத்தப்பா, முரளி விஜய் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கெவின் பீட்டர்சனுக்கு ரூ..2 கோடிதான்
ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி, பிராட் ஹேடின், பிராட் ஹாட்ஜ், மைக்கேல் ஹசி, மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் பட்டின்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், சமித் பட்டேல், கெவின் பீட்டர்சன், நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இலங்கையின் திலகரத்னே தில்ஷான், மஹேல ஜெயவர்த்தனா, ஏஞ்செலோ மேத்யூஸ், மேற்கிந்தியத் தீவுகளின் மார்லான் சாமுவேல்ஸ் ஆகியோருக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இர்ஃபானுக்கு ரூ.1.5 கோடி
இந்தியாவின் ஆல்ரவுண்டரான இர்ஃபான் பதானுக்கு அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 36 பந்துகளில் சதம் கண்ட நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் இந்த முறை அதிகஅளவில் விலை போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய அடிப்படை விலையாக ரூ.1 கோடியாகும். நெதர்லாந்து கிரிக்கெட் வீரரான ரியான் டென் தஸ்சாத்தேவுக்கு அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முரளீதரனுக்கு ரூ.1 கோடி
ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்தான் இந்த முறை இடம்பெற்றுள்ள வீரர்களில் அதிக வயதுடையவர். அவருக்கு இப்போது வயது 43. அவருக்கு அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த ஹாக், ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். 40 வயதுக்கு மேற்பட்ட மற்றொரு வீரர் முத்தையா முரளீதரன் ஆவார். அவருடைய அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். இவர் கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.
பாகிஸ்தான் வீரர்கள்
7 வது ஐபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறாதபோதிலும் பாகிஸ்தானில் பிறந்து வெளிநாட்டில் குடியேறியவர் களான அசார் மெஹ்மூத் (இங்கிலாந்து) பவாட் அஹமது (ஆஸ்திரேலியா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் அசார் மெஹ்மூத் கடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
சன் ரைசர்ஸ் சங்ககரா
இலங்கை அணி இந்த ஆண்டு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சென்று விளையாடவிருப்பதால் அதற்கு தயாராவதற்காக சங்ககாரா போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளனராம். சங்ககாரா, கடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைஸர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார்.
மேட்ச் கார்டு
ஒவ்வொரு அணியும் எத்தனை வீரரை தக்கவைத்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே அவர்களுக்கு வழங்கப்படும் "மேட்ச் கார்டு"களின் எண்ணிக்கை அமையும். 3 முதல் 5 வீரர்களை தக்கவைக்கும் அணிகளுக்கு ஒரு "மேட்ச் கார்டு" மட்டுமே வழங்கப்படும்.
ஒன்று முதல் இரண்டு வீரர்களைத் தக்கவைக்கும் அணிக்கு இரு "மேட்ச் கார்டு"களும், ஒரு வீரரைக்கூட தக்கவைக்காத அணிக்கு 3 "மேட்ச் கார்டு"களும் வழங்கப்படும்.
16 முதல் 27 வீரர்கள்
ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்களுக்கு குறையாமலும் 27 வீரர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
அவர்களில் 9 பேர் வெளிநாட்டினராக இருக்கலாம். ஆடும் லெவனில் 4 வெளிநாட்டினர் மட்டுமே இடம்பெற வேண்டும்.
5 வீரர்களை தக்கவைக்கலாம்
ஒவ்வொரு அணியும் கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். அவர்களில் 4 பேருக்கு மேல் இந்திய அணிக்காக விளையாடுபவர்களாக இருக்கக்கூடாது.
கோடிகளில் சம்பளம்
5 வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் முதல் வீரருக்கு ரூ.12.5 கோடியும், 2-வது வீரருக்கு ரூ.9.5 கோடியும், 3-வது வீரருக்கு ரூ.7.5 கோடியும், 4-வது வீரருக்கு ரூ.5.5 கோடியும், 5-வது வீரருக்கு ரூ.4 கோடியும் விலையாக நிர்ணயிக்கலாம். அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் தவிர மற்ற அனைவரும் ஏலத்தில் பங்கேற்பார்கள்.