ஹராரே: இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி 20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
3-0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை வென்ற இந்தியா, தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வேவை சந்திக்கிறது.
கே.எல்.ராகுல், மந்தீப் சிங், சஹல், ரிஷி தவான், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் இந்திய டி20 அணிக்காக முதன் முதலில் களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்கள் தவிர டோணி, அம்பட்டி ராயுடு, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அக்சர் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோரும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை தொடங்கிய இப்போட்டியில் டாசில் வென்ற டோணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக சிகும்புரா 54, வாலர் 30, மசகட்சா 25, சிபாபா 20, சிக்கந்தர் 20, ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் பும்ப்ரா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அக்ஸர் பட்டேல், சாகர், ரிஷிதவான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 48, மன்தீப் சிங் 31 ரன்கள் எடுத்தனர்.டோணி 17 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலையில் உள்ளது.