நாக்பூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வருகிறது.
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது. இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.
அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். இஷாந்த் சர்மா, ஜடேஜா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது.
அதன்பின் களம் இறங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறியது. முதல்நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்தியா 11 ரன்கள் எடுத்து இருந்தது. லோகேஷ் ராகுல் 7 ரன்களில் அவுட்டானார்.
இன்று ஆட்டத்தை தொடர்ந்த முரளி விஜய் மற்றும் புஜாரா ஜோடி நிதானமாக ஆடி வருகிறது. முரளி விஜய் 186 பந்துகளில் செஞ்சுரி அடித்தார். இது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இவரது 10 வது செஞ்சுரி ஆகும். முரளி விஜய்க்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்துவரும் புஜாரா 63 ரன்கள் எடுத்துள்ளார்.
இவர்களின் வலுவான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்தியா பெரிய டார்க்கெட் எடுக்க வாய்ப்புள்ளது. தற்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வருகிறது.