பெங்களூர்: இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி சர்ச்சையான முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தடுமாறிய இந்திய அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா திணறியபோதிலும், இந்தியா அளவுக்கு முதலுக்கு மோசமில்லை. மொத்தம் 276 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை விட 126 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
முதல் போட்டியில் 13 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி இந்த போட்டியிலும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹசல்வுட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த அவர், நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையின் உதவியை நாடினார்.
ஆனால், ஹாட் ஸ்பாட் எனப்படும் வெப்ப உணரி தொழில்நுட்பம் டிஆர்எஸ் முறையில் பயன்படுத்தாத காரணத்தால் மூன்றாவது நடுவரால் தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. இதனால் களத்தில் உள்ள நடுவரின் தீர்ப்பையே மூன்றாவது நடுவரும் உறுதி செய்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த கோஹ்லி மைதானத்தை விட்டு வெளியேறினார். இது ரசிசர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.