கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் இந்திய அணிக்கு மேலும் ஒரு சோகமாக அஜிங்கியா ரஹானே காயமடைந்துள்ள செய்தி வந்துள்ளது.
இன்று நடக்கும் 4வது ஒரு நாள் போட்டியின்போது பீல்டிங் செய்த சமயத்தில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டு அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்து விட்டது. தொடரையும் இழந்து விட்டது. இன்று நான்காவது ஒரு நாள் போட்டி கான்பெராவில் நடக்கிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியா பவுலிங் செய்தது. அப்போது பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ரஹானேவின் வலது கையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. வலியால் தவித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஹானேவுக்கு கையில் தையல் போடப்பட்டுள்ளது. அவர் இன்றைய போட்டியில் பேட் செய்வது இயலாத காரியமாகி விட்டது. மேலும் மீதமுள்ள தொடரிலும் அவர் பங்கேற்பாரா என்பதும் சந்தேகமாகி விட்டது.
இந்தத் தொடரில் 2 அரை சதம் அடித்துள்ளார் ரஹானே. இன்றைய போட்டியிலும், மீதமுள்ள போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் ரஹானே நாடு திரும்புவார் என்று தெரிகிறது.