வில்லன் சித்தரிப்பு
ஆகாஷ் சோப்ரா இந்திய டெஸ்ட் அணியில் ஆடிய போது 2003-04இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணியில் இடம் பெற்று இருந்தார். அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி தன்னை சீண்டினார்கள் என்பதையும், அதே சமயம் அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த நாட்டு ஊடகங்கள் கோலியை மட்டும் எப்படி வில்லன் போல சித்தரிக்கின்றன என்பது பற்றியும் குறித்து கூறினார்.
ஆஸி.வின் கடந்த காலம்
"ஆஸ்திரேலிய ஊடகங்கள் தங்கள் நாட்டு அணியை ஆதரித்து வருகின்றன. அதற்காக இந்தியா மற்றும் கோலியை உலக கிரிக்கெட்டின் வில்லன் போல சித்தரிக்கின்றன. இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொண்டு தாங்கள் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டோம் என கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்" என்றார் ஆகாஷ் சோப்ரா.
யாரும் எல்லை மீறவில்லை
"நான் தனிப்பட்ட முறையில் கோலி மற்றும் அணியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். ஒன்றும் தவறாக நடக்கவில்லை. யாரும் எந்த எல்லையையும் மீறவில்லை" என்றார் ஆகாஷ் சோப்ரா.
இதை நீங்க பேசவே கூடாது
மேலும், தான் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த போது தன்னை ஒரு ஆஸ்திரேலிய வீரர் சீண்டியதையும் நினைவு கூர்ந்தார். அப்படிப்பட்டவர்கள் சீண்டுவதை பற்றியெல்லாம் பேசவே கூடாது என்றும் காட்டமாக கூறியுள்ளார்.
மருவை மலையாக மாற்றும் ஊடகங்கள்
ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய அணி மற்றும் கேப்டன் கோலி விஷயத்தில் அதிகப்படியாக நடந்து கொண்டு, ஒரு மருவை கூட மலை என சிறு விஷயங்களை ஊதி பெரிதாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
வேறு பார்வைகள்
ஆனால், கவாஸ்கர் கோலியின் நடவடிக்கைகள் இந்திய அணியை பாதிக்கும் என வேறு ஒரு கோணத்தில் இதை அணுகுகிறார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலர் கோலி நடந்து கொள்வது கிரிக்கெட்டுக்கு நல்லது என அவருக்கு கொம்பு சீவி வருகிறார்கள்.