2003ல் இந்திய அணியில் போட்டி
இந்தியாவின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கடந்த 2003ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக முதன் முதலில் களம் கண்டவர்.
301 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்
சர்வதேச அளவில் 29 டெஸ்ட் போட்டிகள், 120 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான், 301 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் கடந்த 2006ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் சிங்கை அடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவர்.
அனைத்து போட்டிகளிலும் ஓய்வு அறிவிப்பு
கடந்த 2012ல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 உலக கோப்பைக்கு பிறகு இர்பான் பதான் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அனைத்து போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக நேற்று அவர் அறிவித்துள்ளார்.
பௌலிங்கில் திருப்தியடையாத தேர்வாளர்கள்
கடந்த 2016ல் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் தான் அதிகபட்ச ரன்களை குவித்ததுடன், சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருந்ததையும் சுட்டிக் காட்டிய இர்பான் பதான், ஆனால் தேர்வாளர்கள் தன்னுடைய பௌலிங்கில் திருப்தியில்லை என்று கூறியதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இர்பான் பதான் வருத்தம்
கடந்த 2016லேயே தான் இனிமேல் இந்திய அணிக்காக விளையாட இனி வாய்ப்புக் கிடைக்க போவதில்லை என்பதை தான் உணர்ந்ததாகவும் இர்பான் கூறியுள்ளார்.
"வருத்தம் மட்டுமே உள்ளது"
தான் மிகவும் உச்சத்தில் இருந்தபோது, தனக்கு மேலும் பல போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய இர்பான் பதான், தன்னுடைய கேரியரை திரும்பி பார்க்கும்போது, புகார்கள் இல்லையென்றாலும் தனக்கு வருத்தம் அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேறாத ஆசை
தான் இதுவரை 301 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் மேலும் 500 - 600 விக்கெட்டுகளை எடுக்கவும் அதிக ரன்களை குவிக்கவும் ஆசைப்பட்டதாகவும், ஆனால் அது நிறைவேறாத விருப்பமாக ஆனதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இர்பான் பதான் ஏக்கம்
சில வீரர்கள் 27 வயதில் தங்களுடைய ஆட்டத்தை துவங்கி 35 வயதுவரை தொடரும் நிலையில், தான் தன்னுடைய 27 வயதிலேயே சர்வதேச அளவில் 301 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தததாகவும் ஆனால், அதற்குரிய அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.