பெங்களூரு: கிரிக்கெட் பலரும் ஏற்ற இறக்கங்களை பார்த்திருப்பார்கள். ஆனால், இறக்கங்களில் சில ஏற்றங்களை பார்த்து வந்த அம்பதி ராயுடுவுக்கு யெல்லோ கேப் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமைந்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 32 வயதாகும் அம்பதி ராயுடு, ரஞ்சிக் கோப்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, இந்திய ஏ அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
2007ல் உருவாக்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீகுக்காக விளையாடினார். இந்த லீக் போட்டிகளை அங்கீகரிக்காத பிசிசிஐ இதற்காக விளையாடியவர்களுக்கு தடை விதித்தது. பின்னர் 2009ல் பிசிசிஐ அளித்த மன்னிப்பு வாய்ப்புக்கு பிறகு மீண்டும் முதல்தர போட்டிகளில் விளையாடத் துவங்கினார்.
2012ல் இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2013ல் தான் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருதினப் போட்டிகளில் முதல் முறையாக களமிறங்கினார். இதுவரை 34 போட்டிகளில், 1055 ரன்கள் குவித்துள்ளார். 2 சதம், 6 அரைசதங்கள் அடித்துள்ளார்.
2016ல் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில், 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடினார். சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு தொடர்ந்து கிடைக்கவில்லை.
தற்போது நடக்கும் ஐபிஎல் 11வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதுவரை 10 ஆட்டங்களில் 423 ரன்கள் குவித்துள்ளார். சிஎஸ்கேவின் யெல்லோ கேப் போட்ட நேரம், அவர், இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆரஞ்ச் கேப் தற்போது அவருடைய கையில் உள்ளது.
இந்த நிலையில், ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருதினப் போட்டிக்கான அணியில் ராயுடு இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியின் புளு கேப் அணிய உள்ளார்.