15 அடியாட்கள்
தேசிய அண்டர் 23 அணியில் தன்னை தேர்வு செய்யவில்லை என கோபம் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர், ஆயுதங்களுடன் கூடிய சுமார் 15 அடியாட்கள் வைத்து தேர்வாளர் அமித் பண்டாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அமித் பண்டாரி இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சிப் போட்டி
டெல்லி கிரிக்கெட் அமைப்பு தேர்வுக் குழுவினர் வீரர்களை தேர்வு செய்ய டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் பயிற்சிப் போட்டி நடத்தி வந்தனர். அப்போது அமித் பண்டாரி மற்றும் பிற தேர்வாளர்கள், மேலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.
ஹாக்கி மட்டை, சைக்கிள் செயின்
அமித் பண்டாரி மற்றும் சில தேர்வாளர்கள் போட்டியை கவனித்துக் கொண்டு இருந்த போது இரு நபர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். என்ன நடந்தது என யோசிப்பதற்குள் சுமார் 15 அடியாட்கள் கையில் ஹாக்கி மட்டை, சைக்கிள் செயின், இரும்பு ராடுகள் கொண்டு அவரை தாக்கியுள்ளனர்.
சுட்டுத் தள்ளி விடுவோம்
இந்த தாக்குதலை தடுக்க வந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற தேர்வாளர்களை அந்த அடியாட்கள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்டால் சுட்டுத் தள்ளி விடுவோம் என மிரட்டி அமித் பண்டாரியை மட்டும் குறி வைத்து தாக்கியுள்ளனர்.
அமித் படுகாயம்
இந்த தாக்குதலில் தலை, காது, கால் என பல இடங்களில் படுகாயம் அடைந்த அமித் பண்டாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் அந்த கிரிக்கெட் வீரர் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ரஜத் சர்மா கூறியுள்ளார்.
காவல்துறையில் புகார்
இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்த தாக்குதல் தொடர்பாக கமிஷனருடன் பேசி உள்ளதாகவும், ஒருவரையும் தப்ப விட மாட்டோம் எனவும் கூறியுள்ளார் ரஜத் சர்மா.
இது முதன்முறையல்ல
டெல்லி கிரிக்கெட்டில் இது போல நடப்பது முதன்முறையல்ல என கூறப்படுகிறது. சில மாதங்கள் முன்பு, அண்டர் 16 தேர்வாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் நடந்தேறி இருக்கிறது என்கிறார்கள். இது எங்கே போய் முடியப் போகிறதோ?