காலம் தாழ்த்திய குற்றச்சாட்டு ஏன்?
புகழ்பெற்ற இரண்டு முன்னாள் இலங்கை வீரர்கள் மீது எப்போதோ எழுந்த புகாரை ஏன் பல காலம் கழித்து தற்போது வெளியிட வேண்டும்? எந்த ஆதாரத்தை கொண்டு இந்த குற்றச்சாட்டுகளை கூறுகிறார்? என்ற கேள்விகளுக்கு நேரடியான விடை இல்லையென்றாலும், இதற்கு பின்னணியில் அதிகார மோதல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
அர்ஜுனா - சுமதிபாலா அதிகார மோதல்
அர்ஜுனா ரணதுங்கா தற்போது இலங்கை அரசில் அமைச்சராக இருக்கிறார். சுமதிபாலா இலங்கையின் கிரிக்கெட் போர்டில் நீண்ட காலமாக அதிகாரத்தில் இருந்து வந்தார். இருவருக்கும் இடையில் பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் இருந்தது. முன்னதாக அர்ஜுனா ரணதுங்கா, சுமதிபாலா மற்றும் அவரது குடும்பத்தினர் மேட்ச் பிக்ஸிங் தரகர்களோடு தொடர்பில் இருந்தார்கள் என குற்றச்சாட்டு வைத்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கு, சுமதிபாலா தான் காரணம் என்றும் வெளிப்படையாக கூறினார்.
வழக்குகள், குழப்பங்கள்
இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் போர்டின் தேர்தலிலும் பல குழப்பங்கள் மற்றும் வழக்குகள் நடந்தன. அர்ஜுனா ரணதுங்காவின் சகோதரர் நிஷாந்தா தற்போது இலங்கை கிரிக்கெட் போர்டு தேர்தலில், சுமதிபாலாவிற்கு எதிராக போட்டியிட உள்ளார். இதை தொடர்ந்தே இது போன்ற குற்றச்சாட்டுகளை சுமதிபாலா கூறி வருகிறார் என நம்பப்படுகிறது. ஆனால், எதற்காக அரவிந்த டி சில்வா பெயரை இதில் சேர்த்துக் கூறினார் என்பது தெரியவில்லை.
இலங்கைக்கு கெட்ட நேரம்
தினேஷ் சண்டிமால் மீது பந்து சேதப்படுத்திய குற்றம், அதை தொடர்ந்து இலங்கை அணி களத்தில் இறங்காமல் நடுவருக்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றம் என வரிசையாக ஐசிசியின் விதிமீறல் தண்டனைக்கு உள்ளானது இலங்கை கிரிக்கெட். அதன் பின், இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டிற்காக தடை செய்யப்பட்டார். இப்படி தவறான வகையில் செய்தியில் அடிபட்டு வரும் இலங்கை கிரிக்கெட் தற்போது, அதிகார மோதலால் மேலும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.