சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கலாம். தற்போது அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட் உலகில் கால் எடுத்து வைப்பதற்காக மிகவும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் அவர் தீவிரமான பயிற்சியில் இருக்கிறார். அனைத்து நாடுகளின் பிட்ச்களிலும் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக இவர் முயற்சி எடுத்து வருகிறார்.
பயிற்சி செய்யும் அர்ஜூன் டெண்டுல்கர்
இவர் உலகின் முக்கிய பவுலர்கள் பலரிடம் பவுலிங் குறித்த அறிவுரைகளை கேட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது இந்திய அணியில் இருக்கும் முன்னணி வீரர்களுக்கு பவுலிங் செய்துள்ளார். இந்திய வீரர்கள் நியூசிலாந்து தொடருக்காக மும்பை வான்கடே மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுடன் அர்ஜூன் டெண்டுல்கரும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் இந்திய வீரர்களுக்கு பவுலிங் செய்தார்.
கோஹ்லிக்கு பந்து வீசிய அர்ஜூன் டெண்டுல்கர்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரஹானேவுக்கும், ஷிகர் தவானுக்கும் முதலில் இவர் பந்து வீசினார். அதன் பின்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவிற்கும் இவர் பந்து வீசினார். கடைசியாக இந்திய அணியின் கேப்டன் கோஹ்லிக்கும் இவர் பந்து வீசினார். இவரது பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்ததாக அனைவரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் இந்த பயிற்சி மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக விளையாடும் அர்ஜூன் டெண்டுல்கர்
இந்திய அணியில் இடம்பிடிக்க மிகவும் கடினமாக முயன்று கொண்டிருக்கும் அர்ஜூன் டெண்டுல்கர் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் பேட்டிங்கை விட பவுலிங்கில் அதிக கவனம் செலுத்தும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வழிகாட்டியாக இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது பவுலிங்கில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் அனைவரும் , அர்ஜூன் டெண்டுல்கர் விரைவில் அணியில் இடம்பெறுவார் என்று கூறியுள்ளனர்.