பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இங்கிலாந்தில் மேற்கொண்ட பயிற்சியே வெற்றியின் ரகசியம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் துவங்கியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4, முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
4 விக்கெட்களை வீழ்த்தியது குறித்து அஸ்வின் கூறியதாவது:
கடந்த ஆண்டு முதல் இங்கிலாந்து கவுன்டி அணியான வார்செஸ்டர்ஷர் அணிக்காக விளையாடி வருகிறேன். இங்கு மைதானம் மிகவும் மெதுவாக உள்ளது. அதனால் பந்து வீசும்போது, அது பவுன்சானாலும், வேகமும் தேவை. இல்லாவிட்டால் அதை அடித்து ஆடத் துவங்கி விடுவார்கள்.
அதனால் வேகத்தை உயர்த்திக் கொண்டேன். அதேபோல், பந்தை செலுத்தும்போது என்னுடைய உடல் முன்னே வரும்படி என்னுடைய ஸ்டைலை மாற்றிக் கொண்டேன். இங்கிலாந்தில் விளையாடும்போது இந்த மாற்றங்களை செய்தது தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் அஸ்வின்.