ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது
ஆஸ்திரேலியாவில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து போட்டியிட்ட இந்திய அணி சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
3 அணிகளும் ஒரு வெற்றி
முதல் போட்டியில் அபார பொளலிங்கின் மூலம் வெற்றியை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துடனான போட்டியில் சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணி தோல்வி கண்டது. இதையடுத்து மூன்று அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
துவக்க வீராங்கனைகள் ஏமாற்றம்
மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய ஸ்மிரிதி வந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் முறையே 35 மற்றும் 28 ரன்களை அடித்தனர். ஆனால் அடுத்தடுத்து விளையாடிய வீராங்கனைகள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் குறிப்பாக பெர்ரியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சாய்ந்தனர். பெர்ரி 4 ஓவர்களில் 13 ரன்களை கொடுத்து இந்தியாவின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
103 ரன்களுக்கு சுருண்ட இந்தியா
இந்த ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரர்கள் உள்ளிட்டவர்கள் அதிகமாகவே சொதப்பினர். கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 21 ரன்களில் சுருண்டது. ஆயினும் இந்த ஆட்டத்தில் இந்திய பௌலர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு சுருண்டது. இதனால் பௌலர்கள் சிறப்பான பந்துவீச்சை அளித்தபோதிலும் சொற்ப ரன்கள் எடுத்திருந்த காரணத்தால் எளிதாக இந்திய அணி தோல்வியை தழுவியது.
கேப்டன் விளக்கம்
போட்டியை அடுத்து பேசிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துவக்க ஆட்டக்காரர்கள் ஆடத்தவறும்போது அடுத்த ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறினார். மேலும் சிறப்பான ஆட்டத்தை அளித்த பௌலர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்து பேசினார். பௌலர் ராஜேஸ்வரி கயக்வாட் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பாராட்டுகளுக்கும் உள்ளானார்.
போட்டியின் சிறப்பு வீராங்கனை
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 47 பந்துகளில் 49 ரன்களை குவித்து தன்னுடைய அணியை வெற்றி பெற சிறப்பாக உதவினார். இதேபோல 14வது ஓவரில் பந்துவீசிய எல்லீஸ், இந்தியாவின் முக்கிய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர், தனியா பாட்டியா மற்றும் தீப்தி சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.