
நல்ல பினிஷர் தேவை
இந்திய வீரர் தோனி போன்று இறுதிகட்ட போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுக்கும்வகையிலான வீரரை தேடி வருவதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் ஆகியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்
இந்நிலையில் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா மோதவுள்ளது. வரும் 13ம் தேதி துவங்கவுள்ள இந்த தொடரில், அணிக்கு தேவையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் இறுதிகட்டத்தை சிறப்பாக முடித்துதரும் பேட்ஸ்மேன் ஆகியோரை சோதனை செய்ய உள்ளதாக ஜஸ்டின் தெரிவித்தார்.

சிறப்பான முடிவு
இறுதி கட்டங்களில் சிறப்பான தருணங்களை தரும் இந்திய வீரர் எம்எஸ் தோனி மற்றும் இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் போன்றவர்கள் மிகவும் சிறப்பானவர்கள் என்று தெரிவித்துள்ள லாங்கர், இதுபோன்ற ஒரு இறுதிக்கட்ட வீரர் தற்போதைய சூழலில் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார். தோல்விகளை நோக்கி சென்ற பல போட்டிகளை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றவர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

இரு வல்லவர்கள்
ஆஸ்திரேலியாவில் மைக் ஹுசே மற்றும் மைக்கேல் பெவன் இந்த கலையில் வல்லவர்களாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள லாங்கர், தான் மட்டுமின்றி உலக அளவில் பல அணிகள், இத்தகைய வீரர்களை தேடி வருவதையும் சுட்டிக் காட்டினார். ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் கடந்த தொடரின் 2வது மற்றும் மூன்றாவது போட்டிகளில் 6வது ஆட்டக்காரராக களமிறங்கி முறையே, 32 மற்றும் 36 ரன்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டில் 6வது ஆட்டக்காரராக 9 பேரை முயற்சித்து பார்த்துள்ளது. இதேபோல 4 முதல் 7 இடங்களில் கடந்த ஆண்டில் 13 வீரர்கள் சோதிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











