ஆஸி.யின் பலம்
இந்த நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல், தொடர்ந்து வெற்றியை பெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு தற்போது இறுதி சவால் இந்தியாவில் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் தகுதி வாய்ந்த வீரர்களுடன் இந்த தொடரில் களமிறங்குகிறார்கள்.
கடினமான சவால்
பழைய பந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தெரியும். மேலும் வெற்றிகரமான சுழற் பந்துவீச்சாளரும் அணியில் இருக்கிறார். எனினும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இமயமலையை ஏறுவது போல் கடினமான செயலாகும். இந்தியா கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்திடம் தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தோல்வி தழுவியது.அதன் பிறகு தொடர்ந்து சொந்த மண்ணில் வெற்றியை பெற்று வருகிறார்கள்.
எதிர்கொள்வதில் சிரமம்
ரிஷப் பண்ட் இல்லாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக தான் இருக்கும். ஆஸ்திரேலியாவில் ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்குவித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியாவில் வித்தியாசமான ஆடுகளத்தை எதிர் நோக்க வேண்டி இருக்கிறது. தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மட்டும் தான் இந்தியாவில் 30க்கு மேல் சராசரி வைத்திருக்கிறார். மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஜடேஜா அஸ்வின் கூட்டணியை எதிர்கொள்வதில் சிரமம் இருக்கும்.
2 செய்தால் வெற்றி
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பழைய பந்தை எப்படி பயன்படுத்தி பந்து வீசி நெருக்கடி தருகிறார்கள் என்பது பொறுத்து வெற்றி வாய்ப்பு இருக்கும். இந்திய அணியை பொறுத்தவரை இரண்டு விஷயங்களை சிறப்பாக செய்தால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்மித்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து யோசிக்க வேண்டும். அதன் பிறகு நாதன் லயானை எப்படி எதிர்கொண்டு ரன்குவிப்பது என்பதில் புஜாரா, ரோகித், விராட் கோலி ஆகிய மூன்று வீரர்களும் யோசிக்க வேண்டும் என்று இயன் சேப்பல் கூறியுள்ளார்.