டெல்லி: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த பெவிலியனில் உள்ள வீரரின் உதவியை நாடினார். ஸ்மித்தின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, கள நடுவரிடம் புகார் செய்தார். இந்த விவகாரத்தில் ஐசிசி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிசிசிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மித், மதி மயங்கிய நிலையில் அந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், பயிற்சியாளர் டேரன் லேமனும் ஸ்மித்துக்கு ஆதரவு தெரிவித்தனர்
பின்னர் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து புகாரைத் திரும்பப் பெற்றது இந்தியா. இதன்மூலம் சர்ச்சை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.
இந்தநிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை, விலங்குகளுடன் ஒப்பிட்ட செயல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத்தின் ஸ்போர்ட்ஸ் வில்லன் யார் என்ற தலைப்பில் அந்த ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில், பாண்டா கரடி, பூனைக்குட்டி மற்றும் நாய் ஆகிய விலங்குகளின் வரிசையில் விராட் கோஹ்லியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. விராட் கோஹ்லி குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருவது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.