சுனில் நரைனுக்கு தடை
இந்த போட்டியில் விளையாட கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை எறிவதாக அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டே இந்த தடைக்கு காரணம்.
முதல் புகார்
கடந்த மாதம் 29ம்தேதி ஹைதராபாத்தில் கொல்கத்தா நைட் ரைடரஸ்-டால்பின் அணிகள் மோதிய போட்டியின்போது முதன்முறையாக நரைன் பந்து வீசும் முறை சரியில்லை என்று கள நடுவர்கள் புகார் அளித்தனர். இதை மூன்றாவது அம்பையரும் ஏற்றுக்கொண்டார்.
இரண்டாவது எச்சரிக்கை
நேற்று வியாழக்கிழமை, ஹைதராபாத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போதும் நரைன் பந்தை எறிவதாக கள நடுவர்கள் சுட்டி காட்டியுள்ளனர். இருமுறை எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதால் சுனில் நரைன் அடுத்த போட்டியில் விளையாடும் தகுதியை இழந்துவிட்டார். எனவே ஐசிசி விதிமுறைப்படி இனிமேல் பந்து வீச்சை ஆய்வு செய்துவிட்டுதான் கிரிக்கெட்டில் நரைன் கால் வைக்க முடியும்.
சிக்கன செம்மல்
சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி வளாகத்திலுள்ள பவுலிங் சோதனை மையத்தில் நரைனுக்கு சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நரைன் மிகவும் சிக்கனமாக பந்து வீசக்கூடியவர். நடப்பு சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் நரைன் மிகவும் சிக்கனமாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
சென்னைக்கு உற்சாகம்
நடப்பு போட்டித்தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நரைன் 12 விக்கெட்டுகளை பறித்துள்ளார். நரைன் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பேட்ஸ்மேன்கள் விழிபிதுங்கியிருந்த நேரத்தில் அவர் பந்து வீச முடியாமல் போயுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. நரைன் ஆப்சென்ட் ஆவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கோப்பையை கைப்பற்றுமா சென்னை அணி என்பது நாளை இரவு தெரிந்து விடும்.
வெஸ்ட் இண்டீஸ் டீமிலும் சந்தேகமே..
இதனிடையே, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் சுனில் நரைன் இடம் பெறுவதும் சந்தேகத்திற்கிடமாக உள்ளது. இந்த போட்டித்தொடர் வரும் 8ம்தேதி கொச்சியில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.