பிரிஸ்பேனில் துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4வது மற்றும் இறுதிப் போட்டி பிரிஸ்பேனில் வரும் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ளது. இதையடுத்து பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
நடவடிக்கை எடுக்க பிசிசிஐ உறுதி
அந்த ஹோட்டலில் ரூம் சர்விஸ், ஹவுஸ் கீப்பிங் வசதிகள் இல்லையென்றும், சர்வதேச தரத்தில் இல்லாமல் சாதாரண ஜிம் மட்டுமே உள்ளதாகவும், ஸ்விமிங் பூல் கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் இந்திய வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விரைவில் வீரர்களுக்கு தேவையான வசதிகள் செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
15ம் தேதி போட்டி
இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் கவனம் செலுத்தி வருவதாகவம் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் கொரோனா பரவலையடுத்து கடுமையான குவாரன்டைன் விதிமுறைகளுடன் வரும் 15ம் தேதி இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுடன் விளையாடவுள்ளனர்.
பிசிசிஐ தகவல்
வீரர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், ஹோட்டலுக்குள்ளேயே வீரர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக் கொள்வதற்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.