டெல்லி: நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கோவா கிரிக்கெட் கழக தலைவர் சேத்தன் தேசாய் மற்றும் செயலாளர் வினோத் பாத்கே ஆகியோரை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
பி.சி.சி.ஐ.யின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கோவா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சேத்தன் தேசாய், செயலாளராக வினோத் பாத்கே மற்றும் பொருளாளராக அக்பர் முல்லா ஆகியோர் உள்ளனர். இவர்கள் மீது கோவா கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய நபர்கள் முறைகேடு குற்றச்சாட்டை அளித்துள்ளனர்.
மேலும், 3.13 கோடி ரூபாய் அளவில் சேத்தன் தேசாய், வினோத் பாத்கே, அக்பர் முல்லா முறைகேடு செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவா கிரிக்கெட் கழக தலைவர் சேத்தன் தேசாய் மற்றும் செயலாளர் வினோத் பாத்கே ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது பிசிசிஐ.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சேத்தன் தேசாய் மற்றும் வினோத் பாத்கே ஆகியோர் முக்கிய பதவிகளில் இருப்பதால் அவர்கள் மீது எழுந்துள்ள புகார் குறித்து பிசிசிஐ விசாரணை நடத்த உள்ளது. சஸ்பெண்ட் நோட்டீஸ் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேத்தன் தேசாய் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மார்க்கெட்டிங் குழுவின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். அதேபோல் வினோத் பாத்கே பிசிசிஐயின் தகவல் தொழில் நுட்பக் குழுவின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.