ஐபிஎல் போட்டியில் பிசிசிஐக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருவாய்!
மும்பை: ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி–20 கிரிக்கெட் போட்டிகளில், 10 சீசனில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு, ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டில் நடக்க உள்ள 11வது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ளன.

சமீபத்தில் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில், போட்டிப் போட்டு ஒவ்வொரு அணியும் கோடிக் கணக்கில் செலவிட்டு வீரர்களை தேர்வு செய்தது.
உலக அளவில் மிகப் பெரிய பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ உள்ளது. கடந்த, 10 ஐபிஎல் சீசன் மூலம் பிசிசிஐக்கு மட்டும், ரூ. 12 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதனால், வருமான வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
தமிழ்நாடு சொசைட்டிகள் பதிவு சட்டத்தின் கீழ், லாபம் ஈட்டாத, கிரிக்கெட் வளர்ச்சிக்கான அமைப்பு என்று பிசிசிஐ பதிவு செய்துள்ளது. அதனால், அதற்கு வருமான வரிச் சலுகை கிடைத்து வந்தது.
ஆனால், ஐபிஎல் வர்த்தக ரீதியில் நடத்தப்படும் போட்டி, அதனால் வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித் துறை ஒற்றைக் காலில் நின்றது. இவ்வாறு, ஐபிஎல் அறிமுகமான 2008 முதல், 10 ஆண்டுகளில், ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்க்கு, ரூ.3,500 கோடி ரூபாயை வரியாக செலுத்த சொன்னது.
எதிர்ப்புடன், இந்த வரியை பிசிசிஐ கட்டியுள்ளது. ஆனால், 30 சதவீதம் வரி அதிகம் என்றும், வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று, வருமான வரித் துறை முறையீட்டு ஆணையத்திலும், மும்பை ஐகோர்ட்டிலும் பிசிசிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.
Story first published: Saturday, February 10, 2018, 12:23 [IST]
Other articles published on Feb 10, 2018


Click it and Unblock the Notifications