சனிக்கிழமை மாலை அறிவிப்பு
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை கடந்த சனிக்கிழமை மாலை அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2014ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிவந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.
நிறுத்தி வைக்க கோரிக்கை
அவரது ஓய்வு சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சக வீரர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர், அதிர்ச்சி மற்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆயினும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது ஜெர்சி எண் 7ஐ மற்றவர்களுக்கு அளிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வீரர்கள், ரசிகர்கள் கோரிக்கை
தோனியின் முன்னாள் சக வீரர் தினேஷ் கார்த்திக், தோனியின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், பிசிசிஐ, அவருடைய 7ம் நம்பர் ஜெர்சியை நிறுத்தி வைக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதை முன்னாள் வீரர் முகமது கைஃயிப்பும் ஆமோதித்துள்ளார். அந்த ஜெர்சியுடன் யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்
தோனியின் டிவிட்டர் பக்கத்தில் அவரை பின்தொடரும் 7.8 மில்லியன் ரசிகர்களும் இதை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் "#ரிடையர்ஜெர்சி7" என்ற வாசகத்தையும் டிரெண்டாக்கி வருகின்றனர். கால்பந்தாட்டத்தில் உள்ளதுபோல கிரிக்கெட்டில் ஜெர்சியை நிறுத்தி வைக்க முடியாது. ஆயினும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் 10ம் எண் ஜெர்சியை பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.