டெஸ்ட் சாம்பியன்ஷிப்
புத்தாண்டில் ரோகித் சர்மாவுக்கு முன் உள்ள பெரிய சவாலே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது தான். அதற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆஸ்திரேலிய அணி பலமாக இருந்தாலும் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடுவதால் ரோகித் சர்மா படைக்கு கூடுதல் சாதகம் இருக்கிறது.
2வது முறையாக வாய்ப்பு
இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெறும். அதிலும் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும். ஏற்கனவே கடந்த முறை இறுதிப் போட்டி வரை வந்து நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா வென்றால் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்ற பெருமை இந்தியாவுக்கு சேரும்.
ஐபிஎல் தொடர்
ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் அடுத்த சவால் ஐபிஎல் தொடர். ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையை மும்பை அணி படைத்திருக்கிறது. எனினும் மும்பை அணிக்கு கடந்த இரண்டு சீசன்கள் படுமோசமாக இருந்துள்ளது. இதனால் ரோஹித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். பலமான அணியை மும்பை அணி நிர்வாகம் கட்டமைத்தாலும் களத்தில் விளையாடி வெற்றி பெற வேண்டியது ரோகித் சர்மாவின் கையில் தான் இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி கேப்டன் என்ற பொறுப்பை சுமந்து கொண்டிருக்கும் ரோகித் சர்மாவுக்கு இது கூடுதல் நெருக்கடியை தரலாம். அதை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் பெரிய சவால்.
50 ஓவர் உலக கோப்பை
இதேபோன்று 2023 ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 50 ஓவர் தொடராக நடைபெறுகிறது. கடந்த முறை இந்திய அணி தோல்வியை தழுவியதால் இம்முறை அதற்கு பழிதீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இழந்த பெருமையை மீட்க ரோஹித் சர்மாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதனை எளிதில் செய்ய முடியாது.
ரோகித் சர்மாவுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் மிகப்பெரிய சவால் என்றால் அது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தான். சொந்த மண்ணில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அணியை தயார் படுத்த வேண்டும்
இதில் இந்தியா உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த உலகக் கோப்பையில் வெல்ல வேண்டும் என்றால் அதற்கான இந்திய அணியை ரோகித் சர்மா ஜனவரி மாதத்தில் இருந்து கட்டமைக்க வேண்டும். எந்த வீரர்கள் தேவைப்படுவார்? யார் தேவைப்பட மாட்டார்? ஏதேனும் முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் எந்த வீரர் மாற்றாக அணிக்குள் வரவேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மா திட்டம் தீட்டினால் மட்டுமே உலக கோப்பையை அவரால் வெல்ல முடியும்.