எச்சில் பயன்பாட்டிற்கு தடை
கொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதால், கடந்த இரண்டரை மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டு வீரர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவக்கும் நோக்கத்தில் ஐசிசி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பந்துகளை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஷாந்த் சர்மா கருத்து
இந்த தடைக்கு சர்வதேச அளவில் அனைத்து பௌலர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எச்சிலுக்கு மாற்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் இந்திய பௌலர் இஷாந்த் சர்மாவும் இதே கருத்தை தற்போது தெரிவித்துள்ளார். எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால் கிரிக்கெட் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போட்டிகள் நியாயமாக நடக்காது
ஸ்டார் ஸ்போர்ட்சின் 'கிரிக்கெட் கனெக்டட்' நிகழ்ச்சியில் பேசிய இஷாந்த் சர்மா, எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால் பந்து ஸ்விங் ஆகாது என்று கூறியுள்ளார். இதனால் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்றும் போட்டிகள் நியாயமாக நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எச்சில் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்
புதிய பந்துகளை ஷைன் செய்ய எச்சில் பயன்படுத்தப்படுகிறது. மாறாக பழைய பந்துகளில் வியர்வை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ரிவர்ஸ் ஸ்விங் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சிவப்பு பந்தை ஷைன் செய்வது முக்கியமாக, வழக்கமாக நடைமுறையில் உள்ளநிலையில், அதை தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.