சிஎஸ்கே நிலை
2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு துவக்கத்திலேயே மோசமானதாக மாறி உள்ளது. அந்த அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், தொடருக்கான பயிற்சியில் தாமதமும் ஏற்பட்டது.
பெரும் இழப்பு
மறுபுறம், அணியின் அனுபவ வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிஎஸ்கே அணிக்கு பெரிய இழப்பாக மாறி உள்ளது. அவர்கள் இழப்பை எப்படி சிஎஸ்கே ஈடு செய்யும்?
மாற்று வீரர்
ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு பதிலாக மாற்று வீரர்களை சிஎஸ்கே அணியால் தேர்வு செய்ய முடியும். ஆனால், ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஹர்பஜன் சிங் முழுவதுமாக விலகி உள்ளதால் அவரது இடத்துக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய சிஎஸ்கே முயற்சிக்கும்.
மும்பை இந்தியன்ஸ் என்ன செய்தது?
மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்கா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் அவருக்கு பதில் சர்வதேச அனுபவம் உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பாட்டின்சனை அந்த அணி தேர்வு செய்துள்ளது. மற்ற அணிகளும் அனுபவ வீரர்களையே மாற்று வீரர்களாக தேர்வு செய்ய விரும்புகின்றன.
ஜலஜ் சக்ஸேனா
ஆனால், சிஎஸ்கே அணிக்கு உள்ளூர் வீரர் ஒருவரை பரிந்துரை செய்துள்ளார் தீப் தாஸ்குப்தா. அந்த வீரர் ஜலஜ் சக்ஸேனா. ஒவ்வொரு ஆண்டும் ரஞ்சி தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி வரும் இந்த சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கு இதுவரை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
உள்ளூர் போட்டிகளில் அசத்தல்
33 வயதாகும் ஜலஜ் சக்ஸேனா 123 உள்ளூர் முதல் தர போட்டிகளில் 6334 ரன்களும், 347 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 35.98. பந்துவீச்சு சராசரி 27. 54 உள்ளூர் டி20 போட்டிகளிலும் ஆடி உள்ளார். அதில் 49 விக்கெட் வீழ்த்தி, 633 ரன்கள் எடுத்துள்ளார்.
முந்தைய ஐபிஎல் அணிகள்
அவர் முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளில் இடம் பெற்றுள்ளார். அவர் அதிக டெஸ்ட் போட்டிகளிலேயே ஆடி இருந்தாலும், அவர் ஆடிய டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றார் தீப் தாஸ்குப்தா.
மூன்று மைதானங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்றே மைதானங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால், போட்டியின் பின் பகுதியில் ஆடுகளம் மோசமாக மாறி, சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் அதற்கேற்ற வீரரையே சிஎஸ்கே தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார் தீப் தாஸ்குப்தா.