2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்யத் துவங்கி உள்ளன. சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகிய நிலையில் பயிற்சி செய்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் செப்டம்பர் 10 அன்று நிறைவடைந்தது. அந்த தொடரில் ஆடி விட்டு ஐபிஎல்-இல் பங்கேற்க வேண்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் சில வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக துபாய் வந்தடைந்தனர்.
டிவைன் பிராவோ வருகை
அதில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் டிவைன் பிராவோவும் ஒருவர். அவர் மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் துபாய் வந்து சேர்ந்தார். அவருக்கு சிஎஸ்கே அணி சிறப்பான வரவேற்பு அளித்தது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது.
500 விக்கெட்கள்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக ஆடிய பிராவோ தன் 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பிராவோ, 500 விக்கெட் என்ற மைல்கல் சாதனையையும் படைத்து வியக்க வைத்தார்.
நல்ல பார்ம்
மேலும், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நல்ல பார்மில் இருந்தார் பிராவோ. முதல் சில போட்டிகளில் அதிக ரன்கள் வாரி இறைத்த அவர் அதன் பின் கட்டுகோப்பாக வீசி எதிரணிகளை திணற வைத்தார். அதே பார்மில் சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தொடரில் ஆட உள்ளார்.
சிஎஸ்கே ஏற்பாடு
இந்த நிலையில், துபாய் வந்த பிராவோவுக்கு சிஎஸ்கே அணி சிறப்பு ஹோட்டல் அறையை தயார் செய்து வைத்திருந்தது. மினி கிரிக்கெட் மைதானம், 500 விக்கெட் வீழ்த்திய சாம்பியன் என்பதை குறிக்கும் வகையில் டைனிங் டேபிள் அலங்காரம் என தூள் கிளப்பி இருந்தது சிஎஸ்கே.
காயம்
அதை அப்படியே வீடியோ எடுத்து தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார் பிராவோ. அவருக்கு கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் காலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால், அவர் அந்தப் போட்டியில் பந்து வீசவில்லை. குவாரன்டைன் முடிந்து அவர் முழு அளவில் தயார் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற் பந்துவீச்சாளர்கள்
பிராவோவுடன், வெஸ்ட் இண்டீஸில் இருந்து மிட்செல் சான்ட்னர், இம்ரான் தாஹிர் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் துபாய் வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் வேறு வேறு அணிக்கு ஆடி இருந்தனர். அவர்களும் நல்ல பார்மில் உள்ளனர்.
ஆறு நாள் குவாரன்டைன்
இவர்கள் மூவரும் ஆறு நாள் குவாரன்டைனில் தங்கள் ஹோட்டல் அறையிலேயே தங்க உள்ளனர். அவர்களுக்கு மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனையும் செய்யப்படும். அதன் பின்னரே அவர்கள் பயிற்சியில் ஈடுபட முடியும்.