சிஎஸ்கே அணியில் கொரோனா
2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்ற சிஎஸ்கே அணியில் முதல் வாரத்தில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு வீரர்கள் மற்றும் 11 அணி உதவியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பாதிப்பு இருந்ததாக கூரபப்ட்டது.
இரண்டு வீரர்கள்
பாதிப்புக்கு உள்ளான இரண்டு வீரர்கள் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெயிக்வாட். அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் முடிவில் இரண்டு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
தீபக் சாஹர்
அந்த பரிசோதனை முடிவில் தீபக் சாஹருக்கு பாதிப்பு நீங்கியது தெரிய வந்தது. அவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார். விரைவில் அணியுடன் பயிற்சி செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
11 பேருக்கு குணமானது
அடுத்து பாதிப்புக்கு உள்ளான 11 உதவியாளர்கள் மற்றும் குடும்பத்தினரும் பாதிப்பு குணமான நிலையில், சிஎஸ்கே அணியின் பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெரிய சிக்கலில் இருந்து வெளியே வந்துள்ளது சிஎஸ்கே அணி.
ருதுராஜ் கெயிக்வாட் நிலை
ஆனாலும், இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு மட்டும் இன்னும் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் அடுத்த இரு நாட்களில் இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ள இருக்கிறார். அதில் பாதிப்பு இல்லை என தெரிய வந்தால் மட்டுமே அவர் மீண்டும் அணியுடன் இணைய முடியும்.
அடுத்து என்ன?
ருதுராஜ் கெயிக்வாட் பாதிப்பில் இருந்து மீண்ட பின் கார்டியோவாஸ்குலர் சோதனை மற்றும் நுரையீரல் சோதனையை மேற்கொண்ட பின்னரே முழுமையாக ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க தயாரானதாக கருதப்படும். தீபக் சாஹரும் அதே போன்ற பரிசோதனைகளை செய்து கொண்டார்.
ரெய்னாவுக்கு மாற்று வீரர்
சுரேஷ் ரெய்னா 2௦20 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், சிஎஸ்கே அணியில் பேட்டிங்கில் வெற்றிடம் உருவாகி உள்ளது. அந்த இடத்தில் பிற வீரர்கள் பெயர்கள் கூறப்பட்டாலும், இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு சில போட்டிகளிலாவது வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
முதல் போட்டி
இந்த சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது. அந்தப் போட்டிக்கு முன் ருதுராஜ் கெயிக்வாட் தயாராவது சந்தேகமே. அவர் முதல் சில போட்டிகளுக்கு பின்னரே போட்டிகளில் பங்கேற்பார்.