நம்புங்கள் லாராவை... இந்தியாதான் டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்லுமாம்!
ஹைதராபாத்: இந்தியாவின் டுவென்டி 20 அணி அபாயகரமானது. அந்த அணியே 2016 டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
சமீப காலத்தில் இந்திய அணி சரிவர ஆடாமல் இருந்திருக்கலாம். சொதப்பியிருக்கலாம். ஆனால் இந்தியா அபாயகரமானது. பலமான அணி, திறமையான வீரர்கள் நிறைந்த அணி. எனவே அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளதாக லாரா கூறுகிறார்.
இந்தியா சமீபத்தில்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி 20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவை சாதாரணமாக கருதி விடக் கூடாது என்று லாரா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி....

உள்ளூரில் புலி பாஸ்
இந்தியா எப்போதுமே உள்ளூரில் சிறப்பாக விளையாடும். அபாயகரமான அணியும் கூட. கடந்த 2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது அதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே
அதிலும் டோணி தலைமையில் விளையாடும் இந்திய எப்போதுமே அபாயகரமானதுதான். ஆச்சரியகரமான வீரர்கள் இந்திய அணியில் நிறைய உள்ளனர். பன்முகத் தன்மை கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

கப்பு உங்களுக்குத்தாய்யா
எனவே டுவென்டி 20 உலகக் கோப்பையை பெறும் வாய்ப்புகள் இந்தியாவுக்கே பிரகாசமாக உள்ளது. எப்போதுமே பிரஷர் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்திய வீரர்கள் நன்கு முதிர்ச்சி அடைந்து விட்டனர். எனவே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அவர்களுக்கு நன்றாகவே உள்ளது.

எங்க கதை ரொம்ப மோசம் பாஸ்
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அடிப்படையிலேயே பல பிரச்சினைகள் உள்ளன. எனவே என்னை அந்த அணியின் பயிற்சியாளராகவோ அல்லது வேறு எந்தப் பொறுப்பிலுமோ நியமித்தால் கூட பெரிதாக மாற்றம் வந்து விடாது.

பில்டிங் ஸ்டிராங்.. ஆனா பேஸ்மென்ட் ரொம்ப வீக்
எங்களது அணியின் அடிப்படை மிக சாதாரணமாக உள்ளது. பிரச்சினைகள் ஆழ வேரூண்றியுள்ளன. நிர்வாக ரீதியாகவும் நாங்கள் சரியில்லை. எனவே பெரிய அளவில் யாராலும் மேஜிக்கை நிகழ்த்தி விட முடியாது என்று நினைக்கிறேன்.

இன்னும் திறமை மிச்சமிருக்கு
இருப்பினும் இன்னும் அணியில் நல்ல திறமையாளர்கள் உள்ளதாக நான் நம்புகிறேன். உலக அளவிலான தரத்துடன் கூடிய திறமையாளர்கள் எங்களிடமும் உள்ளனர். இளம் வீரர்கள் பலர் வருகின்றனர். நல்ல திறமையை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். நல்ல நிர்வாகமும் முதலில் அவசியமாகிறது. ஒற்றுமை நிலவ வேண்டும்.

ஐ லவ் இந்தியா
எனக்கு இந்தியாவைப் பிடிக்கும். நான் விளையாடிய காலத்திலேயே கூட இந்தியாவுக்கு வரவே அதிகம் விரும்புவேன். இந்திய மக்களை நிறைய பிடிக்கும். அவர்களது வாழ்க்கை முறை என்னைக் கவர்ந்தது. சச்சின், டிராவிட், லக்ஷ்மண், டோணி, கோஹ்லி என நல்ல நண்பர்கள் இங்கு உள்ளனர் என்றார் லாரா.


Click it and Unblock the Notifications