மெல்போர்ன் : இந்தியாவிற்கு சாதகமாக லக்கும் செயல்படுவதாகவும் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என்றும் இந்திய மகளிர் அணியின் பேட்ஸ்வுமன் வேதா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்று இந்திய மகளிர் நினைத்ததாகவும் அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ள வேதா கிருஷ்ணமூர்த்தி அடுத்தது கோப்பைதான் டார்கெட் என்றும் கூறியுள்ளார்.
நாளை மறுதினம் மெல்போர்னில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியா, 4 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுதினம் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இதில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியுடன் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி மோதவுள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு மத்தியில் கடந்த 21ம் தேதி தொடரின் துவக்க நாளிலேயே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இதையடுத்து, தற்போது நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை ஆஸ்திரேலிய அணி மிகவும் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவிற்கு சாதகமாக லக்கும் செயல்படுவதாகவும், தனக்கு இதில் அதின நம்பிக்கை உள்ளதாகவும், நாம் கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றுவோம் என்றும் இந்திய பேட்ஸ்வுமன் வேதா கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ல் இங்கிலாந்திடம் கோப்பையை இந்தியா தவறவிட்ட நிலையில், இறுதிப்போட்டியில் கோப்பையை தவறவிடுவதன் வலி தனக்கு நன்றாக தெரியும் என்றும், இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் வகையில், சிறப்பாக செயல்பட அணியின் அனைத்து வீராங்கனைகளும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வானிலை நம்முடைய கைகளில் இல்லாதநிலையில், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவது என்பது சிறப்பானது என்று தெரிவித்துள்ள வேதா கிருஷ்ணமூர்த்தி, இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது இந்திய அணிக்கு கிடைத்த பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலில் இறுதிப்போட்டிக்கு செல்வதை இலக்காக கொண்டு இந்திய மகளிர் செயல்பட்டதாகவும், அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இறுதிப்போட்டியில் வெல்வதே அடுத்த இலக்கு என்றும் அதையொட்டி திட்டமிட்டு விளையாடுவோம் என்றும் வேதா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த மாதத்தில் முத்தரப்பு தொடரின் போட்டியில் மோதிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 173 ரன்களை குவித்தது. இதேபோல தற்போதைய தொடரிலும் முதல் போட்டியிலேயே 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடாத வேதா கிருஷ்ணமூர்த்தி, தற்போதைய தொடரிலும் 4 போட்டிகளில் 35 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால் இறுதிப்போட்டியில் வேதா கிருஷ்ணமூர்த்தியின் பங்கு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அணியில் உள்ள 15 பேரும் தங்களுக்கான பணியை உணர்ந்து செயல்பட்டு கோப்பையை வெல்ல தீவிரமாக இறங்குவோம் என்று வேதா கூறியுள்ளார்.