ஆஸி.க்கு தண்ணி காட்டிய தவான்.. 143 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய சாதனை
மொகாலி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், ஷிகர் தவான் 143 ரன்கள் எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுபயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் தோனி மற்றும் கேதர் ஜாதவின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலியின் நாற்பதாவது ஒருநாள் சதம் மற்றும் விஜய் சங்கரின் ஆல்ரவுண்ட் திறமையால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எட்டு ரன்களில் இந்தியா வென்றது. ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், கோலியின் சதத்தையும் தாண்டி, இந்தியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

4வது ஒருநாள் போட்டி
அதனால் ஒருநாள் தொடர் 2-1 என கணக்கில் உள்ளது. இதையடுத்து, மொகாலியில் 4வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்தனர். குறிப்பாக, ஹிட்மேன் ரோகித் சர்மா தனது 40-வது ஒரு நாள் அரைசதம் அடித்து 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தவிடுபொடியாக்கிய பேட்டிங்
பல ஆட்டங்களில் தொடக்க வீரர்களான ரோகித், தவான் சரியாக ஆடவில்லை என்ற முணுமுணுப்புகளை இந்த போட்டியின் மூலம் தவிடுபொடியாக்கினர். தொடக்கம் முதலே ஒரு முடிவோடுதான் இருவரும் களம் இறங்கினர்.

பந்துகள் பறந்தன
தவறான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் அனுப்பினர். தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய தவான்.. ஒரு கட்டத்தில் ஆஸி. பந்துகளை வெளுக்க ஆரம்பித்தார்.

143 ரன்கள் சாதனை
அதிரடியாக விளையாடிய தவான் தனது 16-வது ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார். அவர் 115 பந்துகளில் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அவர் அடித்த அதிகபட்ச ரன்களாகும். தொடர்ந்து பல போட்டிகளில் சொதப்பி.. விமர்சனத்துக்கு உள்ளான தவான்.... 143 ரன்கள் என்ற தமது அதிகபட்ச ரன்களின் வழியே பதில் சொல்லி உள்ளார்.


Click it and Unblock the Notifications