மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்றதன் மூலம் 3 முத்தான சாதனைகளை படைத்திருக்கிறார் தல தோனி.
நடப்பு உலக கோப்பை தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான குப்தில் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் தோனி ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்த போட்டி தோனிக்கு 350வது ஒருநாள் போட்டி.
அதன் மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற 10 வது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அதேவேளையில் தான் விளையாடிய 350 போட்டிகளில் தோனி 200 போட்டிகளில் தனது அணிக்கு தலைவராக விளையாடி உள்ளார் என்பது தனி சிறப்பு.
இந்தியாவை பொறுத்த வரை, சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர், 350 ஒருநாள் போட்டியில் களமிறங்கிய 2வது வீரர் என்ற சாதனையையும் தல தோனி படைத்து இருக்கிறார். இந்த 350 ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக களம் இறங்கிய முதல் வீரர் என்ற உலக சாதனையையும் தோனி படைத்துள்ளார்.
அதற்கு முன்பாக, இலங்கை கீப்பர் சங்ககாரா 360 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் 44 போட்டிகளில் கீப்பிங் தவிர்த்து ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ் மேனாக விளையாடி உள்ளார். அதாவது, அவர் 44 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.