உலகக்கோப்பையில் இந்தியா
1983ஆம் ஆண்டு இந்தியா தன் முதல் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதன் பின் 2003ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
கேப்டன் தோனி
அதன் பின் 2007இல் முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையில் களமிறங்கிய இளம் வீரர்கள் அணி கோப்பை வென்று சாதனை செய்தது. அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் அதிக அனுபவமற்ற ஜோகிந்தர் சர்மாவை பந்து வீசச் செய்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கேப்டன் தோனி.
திடீர் மாற்றம் செய்த தோனி
அதே போலவே, 2011 உலகக்கோப்பை தொடரிலும் இறுதிப் போட்டியில் கேப்டன் தோனி திடீர் மாற்றம் செய்தார். அது சேஸிங்கில் பெரிய பலனை அளித்தது. அந்த இறுதிப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா ஆடி வந்தது.
துவக்கம்
துவக்க வீரர்கள் சேவாக், சச்சின் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி அழுத்தத்தில் இருந்தது. அப்போது கௌதம் கம்பீர் மற்றும் கோலி 83 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் பின் கோலி வெளியேறிய போது, மொத்த இந்தியாவும் யுவராஜ் சிங் பேட்டிங் செய்ய வருவார் என ஆவலுடன் காத்திருந்தது.
தோனி வந்தார்
ஆனால், அந்த உலகக்கோப்பை தொடரில் மோசமான பேட்டிங் பார்மில் இருந்த தோனி ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இலங்கை அணியின் பலம் அப்போது சுழற் பந்துவீச்சாக இருந்தது. குறிப்பாக, முத்தையா முரளிதரன் அந்த அணியில் அச்சுறுத்தி வந்தார்.
ஏன் இந்த முடிவு?
இந்திய அணியில் கௌதம் கம்பீருடன், யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்து இருந்தால், இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்து இருப்பார்கள். அது இலங்கை அணியின் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறி இருக்கும். அதை மாற்றினார் தோனி.
அதிரடி ஆட்டம்
மேலும், மத்திய ஓவர்களில் சுழற் பந்துவீச்சை தானே சமாளிக்க முடிவு செய்த கேப்டன் தோனி ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். வந்தது முதல் முத்தையா முரளிதரன் பந்துவீச்சை அதிரடியாக தாக்கி ஆடினார். சூரஜ் ரன்டிவ் பந்துவீச்சையும் எளிதாக சமாளித்தார்.
தோனி, யுவராஜ் ஆட்டம்
கௌதம் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்த போதும், தோனி நிலையாக ஆடினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி, சிக்ஸ் அடித்து சேஸிங்கை முடித்து வைத்தார். யுவராஜ் சிங்கும் அவருடன் களத்தில் இருந்தார்.
சச்சின் யோசனை
தோனி எடுத்த முடிவு மிகச் சரியாக அமைந்தது. மேலும், இந்த முடிவை எடுக்க சச்சினும் உதவியதாக கூறப்படுகிறது. சச்சின் தன் அனுபவத்தை வைத்து, களத்தில் வலது - இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
பாராட்ட வேண்டும்
அதே சமயம், பேட்டிங் செய்ய தயாராக அமர்ந்து இருந்த தோனி, அந்த தொடரின் உச்சகட்ட பார்மில் இருந்த யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக களமிறங்கி அசத்தினார். இதில் கேப்டன் தோனியை விட, பேட்ஸ்மேன் தோனியை பாராட்டியே ஆக வேண்டும். நல்ல பார்மில் இல்லாத போதும், இறுதிப் போட்டியில் சவாலாக தன் பேட்டிங் வரிசையை மாற்றி சிறப்பாக ஆடி இருந்தார்.