அமரபள்ளி வழக்கு
அமரபள்ளி என்ற வீடுகள் கட்டித் தரும் ரியல் எஸ்ட்டேட் நிறுவனம் மக்களிடம் வீடு கட்டித் தருவதாக பணம் வாங்கி விட்டு, பல ஆண்டுகள் ஆகியும் வீடுகள் கட்டித் தரவில்லை எனக் கூறி வழக்கு போடப்பட்டு, அது தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தோனி போட்ட வழக்கு
தோனி இந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் ஆவார். அவருக்கு விளம்பரங்களுக்காக கொடுக்க வேண்டிய பணத்தையும் அந்த நிறுவனம் கொடுக்கவில்லை எனக் கூறி அவரும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும் நடைபெற்று வருகிறது.
மக்கள் பணம்
அமரபள்ளி நிறுவனம் மக்கள் வீடு கட்ட கொடுத்த பணத்தில் சுமார் ரூ,6.52 கோடியை தோனியின் விளம்பரத் தொகைக்காக கொடுத்துள்ளனர் என நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர்கள் அறிக்கை அளித்துள்ளனர். இதுவரை தோனிக்கு அந்த நிறுவனம் பல கோடிகள் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில், அந்த நிலை மாறி தோனி சிக்கலில் சிக்கி இருக்கிறார்.
வியாபார தொடர்புகள்
இது மட்டுமில்லாமல், அமரபள்ளி நிறுவனத்துக்கும், தோனிக்கும் பல வியாபார தொடர்புகள் இருந்ததாக ஆடிட்டர்கள் கூறி உள்ளனர். அமரபள்ளி மாஹி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு வீடுகள் கொண்ட காம்ப்ளெக்ஸ் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் இயக்குனர்களில் ஒருவர் தோனியின் மனைவி சாக்ஷி என்கிறது ஆடிட்டர்கள் அளித்த அறிக்கை.
எல்லாமே பணம்
அந்த நிறுவனத்திற்கான ஷேர் கேபிடல் தொகை முழுவதும் ரொக்கப் பணமாக பெறப்பட்டுள்ளது. வங்கி மூலமாக வரவில்லை. அதே போல, செலவுக் கணக்குகளும் முழுவதும் ரொக்கப் பணமாகவே செய்யப்பட்டுள்ளது என சந்தேகத்தை கிளப்பி உள்ளது ஆடிட்டர் அறிக்கை.
சிஎஸ்கே சர்ச்சை
இது மட்டுமின்றி, தோனியின் மேலாளராக இருக்கும் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் அமரபள்ளி போட்டுக் கொண்ட விளம்பர ஒப்பந்தத்தில் 2015 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூலம் பல்வேறு வகையில் விளம்பரம் செய்வதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தம் பத்திரத்தில் எழுதப்படவில்லை என்பதோடு, சிஎஸ்கே அணியில் இருந்து யாரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை.
திரும்ப கொடுக்க வேண்டும்
தற்போது, அடுத்த ஒரு மாதத்திற்குள் தோனியின் விளம்பரத்திற்காக வழங்கப்பட்ட 6.52 கோடி ரூபாய், வீடு வாங்க மக்கள் கொடுத்த பணம் என்பதால், அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தோனிக்கு கொடுக்க வேண்டிய பணம்
தோனி மற்றும் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களுக்கு 115 கோடி ரூபாய் அளவுக்கு அமரபள்ளி நிறுவனத்திடம் பாக்கி உள்ளது என கூறி உள்ளனர். இருந்தாலும், அந்த 6.52 கோடி ரூபாயை திரும்ப கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.