
இந்தியா தோல்வி
இரண்டாவதாக பேட்டிங் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, சொந்த மண்ணில், இளம் வீரர்கள் கொண்ட இலங்கையிடம் தோற்றது ரசிகர்களை அதிச்சிக்குள்ளாக்கியது.

புனே பிட்ச் சரியில்லங்க
போட்டிக்கு பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் டோணி கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக ஆஸ்திரேலியாவில் நாங்கள் சுற்றுப்பயணம் செய்தோம். அந்த பிட்சில் இருந்து புனே பிட்ச் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

ஒரு மாதிரியா வந்துச்சி
பிட்சில் பவுன்சர் மற்றும் வேகம் இருந்தது. இரண்டுமே சீரற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் இருந்ததுதான் பிரச்சினை. பிட்சை சரியாக ரோலரை வைத்து சீர்படுத்தி வைக்கவில்லை. இந்த பிட்சில் தேவையில்லாமல் பெரிய ஷாட்டுகளை அடிக்க முற்பட்டதை தவிர்த்திருக்க வேண்டும் என்றார் டோணி.

இது இங்கிலாந்துங்க
ஆஸ்திரேலிய பிட்சில் விளையாடிவிட்டு, இந்திய பிட்சில் ஆடுவதற்கு வீரர்கள் சிரமப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த டோணி, இது இந்திய பிட்சே கிடையாது. இது இங்கிலாந்து பிட்சுக்கு இணையானது. அங்குதான் இதுபோன்ற சீரற்ற பவுன்சும், வேகமும் இருக்கும் என்றார்.

கொஞ்சம் அதிகம்
இது 160 ரன்கள் விளாசும் விக்கெட் கிடையாது. 140 ரன்களே போதுமானதாக இருந்தது. கூடுதலாக 25 முதல் 30 ரன்கள் எடுத்திருந்தாலும், இந்தியா வெல்ல வாய்ப்பு இருந்தது. பிட்சின் தன்மையை கருத்தில்கொள்ளாமல் பெரிய ஷாட்டுகளை அடித்து குறைந்த ரன்னில் சுருண்டு விட்டோம்.

எல்லோரும் பேட் செய்தோமே..
இந்த போட்டியில் நல்ல விஷயம் என்னவென்றால், வெகு நாட்களுக்கு பிறகு அனைத்து வீரர்களுக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது (ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 போட்டிகளில், இந்தியா எந்த போட்டியிலுமே அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவில்லை). பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாறு டோணி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











