டெல்லி: இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடும் இதர உலக அணிக்காக இந்தியாவின் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா விளையாட உள்ளனர்.
கடந்த ஆண்டில் இர்மா மற்றும் மரியா புயல்கள் வீசியதில், வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் இதர உலக அணிகள் இடையே ஒரு டி-20 போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.
ஐசிசி அங்கீகாரம் வழங்கியுள்ள இந்த ஆட்டம், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், இந்த மாதம் 31ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி தனது அணியை அறிவித்துள்ளது.
கார்லோஸ் பிராத்வொயிட், சாமுவேல் பாத்ரி, ராயட் எம்ரிட், ஆந்த்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மான் பாவெல், டேனிஷ் ராம்தின், ஆந்தரே ரசல், மார்லான் சாமுவேல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறுகின்றனர்.
இங்கிலாந்து அணியின் இயான் மார்கென் இதர உலக லெவன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், ஷாகித் அப்ரிதி, இலங்கையின் தெசேரா பெரிரா, வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹாசன், தமிம் இக்பால், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் உலக லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், உலக லெவன் அணிக்காக இந்தியாவின் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து உலக லெவன் அணியில் 9 பேர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.