99 ரன் எடுத்ததுமே ஒரு மாதிரி ஆயிடுவாங்களாம் பேட்ஸ்மேன்கள்... ஏன் தெரியுமா?
சிட்னி: நூறு ரன்னை எட்ட ஒரு ரன் தேவைப்படும் நேரத்தில் சில பேட்ஸ்மேன்கள் 'ரன் அவுட்' ஆவார்கள். சிலரோ சிக்சர் அடிக்கிறேன் என்று பந்தை கேட்ச் கொடுப்பார்கள். அப்புறம் என்ன 99 ரன்னில் சோகத்தோடு மைதானத்தை விட்டு வெளியேறுவார்கள். எல்லாம் பதற்றம்தான் பாஸ் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கிரிக்கெட் விளையாட்டில் ஒருநாள் போட்டிகளின் போது சதம் அடிக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஆசை. 50 ரன் கடக்கும் போது மட்டையை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டுகளுக்கு நன்றி சொல்லும் வீரர்கள் பின்னர் மளமளவென 75 ரன்களை கடந்து விடுவார். 90 ரன்களை எட்டிய உடன் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும்.
இந்த பதற்றத்தினாலே 99 ரன்களில் அவுட் ஆன பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இதுமாதிரியான ஒருவித நடுக்கம் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஏற்படுமாம். இதனை ஆய்வு மூலம் நிரூபித்துள்ளது ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று.
ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் இந்த நூறு ரன் நடுக்கம் பற்றி சில சுவராஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளது.

43 வருட ஆராய்ச்சி
ஆஸ்திரேலியாவில் உள்ள QUT பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகளை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.

சாதனை மைல்கல்
பேட்ஸ்மென்கள் தங்களது முக்கிய மைல்கல்லான 100 ரன்களை எட்டும் முயற்சியில் தங்களது ஸ்ட்ரைக் ரேட்டை குறைத்து விடுகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், மைல்கல்லை எட்டிய பிறகு அதே பேட்ஸ்மென்களில் ஸ்ட்ரைக் ரேட்டில் 45% முன்னேற்றம் இருக்கிறது.

அட அவுட்
அதேபோல் மைல்கல்லை எட்டிய பிறகு அவுட் ஆவதும் இரட்டிப்பாக உள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பேட்ஸ்மென்கள் இவ்வாறு தங்கள் சொந்த சாதனைக்காக ஸ்ட்ரைக் ரேட்டைக் குறைக்கும் போது பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட அணிக்கு அது நன்மை பயப்பதில்லை என்கிறார் QUT ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸ்-ஐ சேர்ந்த பேராசிரியர் லயோனல் பேஜ். குறிப்பாக இது ஒருநாள் போட்டிகளில் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சொந்த சாதனை
பேட்ஸ்மென்கள் அனைவருக்கும் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான இலக்கு என்றாலும், தங்களது சொந்த சாதனைகளுக்காக முயற்சி செய்யும் போது அது அணியின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

1 ரன்னுக்காக
ஒரு வீரர் தனது 99 ரன்னிலிருந்து 100 ரன்னுக்குச் செல்வது என்பது அணியைப் பொறுத்தவரை 1 ரன் மட்டுமே. ஆனால் அந்த தனிப்பட்ட வீரருக்கு அது மிகப்பெரிய விஷயமாகும்.

மனஅழுத்தம்
இது பற்றிய உளவியல் ரீதியாக ஆய்வு செய்யும் போது, 100 ரன்களுக்கு அருகில் இருக்கிறோம் என்பதன் மீதான அழுத்தம் வீரர்களுக்கும் மன அழுத்தமே என்கின்றனர்.

பதற்றமான ஓட்டங்கள்
90-ரன்களைக் கடந்த பிறகு அது ‘பதற்றமான 90-களாக' இருக்கலாம் அல்லது அல்லது மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற முனைப்பில் அழுத்தம் ஏற்பட்டு தானாகவே ஸ்ட்ரைக் ரேட்டை குறைக்கலாம்.

இது தன்னலமா?
அணி ஒற்றுமையை முக்கியமாகக் கருதும் அணிகளில் தனிப்பட்ட வீரர்களும் நன்றாக விளையாடி விடுகின்றனர். அணி நன்றாக விளையாடாத பட்சத்தில் சில வீரர்கள் தன்னல முனைப்பு கொள்கின்றனர் என்று நான் சந்தேக்கிறேன் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து போட்டிகளுக்கும்
இது ஒருநாள் போட்டிகளை வைத்து ஆராயப்பட்டாலும், அனைத்து வடிவங்களுக்கும் பொருந்தக்கூடியதா என்பதைப் பார்க்கவேண்டும் என்கிறார் பேராசிரியர் பேஜ். நம் ஊர் பேட்ஸ்மேன்களும் இதை நிரூபிக்கும் வகையிலேயே சதம் அடிக்கும் போது நடந்து கொண்டுள்ளனர்.

தெண்டுல்கர்
இந்தியா கிரிக்கெட்டின் கடவுள் என்று அவரது ரசிகர்களார் வர்ணிக்கப்படும் தெண்டுல்கர் சதம் அடித்தாலே அன்றைக்கு இந்தியா தோல்விதான் என்ற நம்பிக்கையே நிலவியது. அதற்கு ஏற்றவாறு அவர் தனது 100-வது சதத்தை அடித்து உலக சாதனை படைத்த போது இந்திய அணி தோல்வி அடைந்தது. அப்போ நூறு ரன் அடிக்க வேண்டும் என்ற பதற்றத்தில் அதிக பந்துகளை வேஸ்ட் செய்வதே அணிகள் தோல்வியடைய காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள்.
எது எப்படியோ இந்த உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களாவது டென்சன் ஆகாமல் சதமடிப்பார்களா பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications