முடங்கிய விளையாட்டுத்துறை
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேசமும் குறிப்பாக விளையாட்டு உலகம் முடங்கியுள்ளது. இதையடுத்து அவர்கள் செய்வதறியாமல் சமூகவலைதளங்களை நம்பி காலத்தை போக்கி வருகின்றனர். மேலும் தங்களது குடும்பத்தினருடன் காலத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு வருகின்றனர்.
தந்தையான இயான் மார்கன்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து வீட்டிற்குள் விளையாட்டு வீரர்கள் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதை போக்குவது மிகவும் சிரமமாக உள்ளது. ஆனால் இயான் மார்கனின் நிலை வேறு மாதிரியாக உள்ளது. இவருக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ள நிலையில், டயாப்பர் மாற்றியே இவருக்கு பொழுது போவதாக கூறுகிறார். இதுவரை ஏறக்குறைய 1000 டயாப்பர்களை மாற்றிவிட்டாராம் மார்கன்.
இயான் மார்கன் மகிழ்ச்சி
உலகளவில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ள இயான் மார்கன், ஆனால் இந்த சூழ்நிலையை, நல்லதாக எடுத்துக் கொள்ள தானும் தன்னுடைய மனைவி தாராவும் முடிவு செய்துள்ளதாகவும், தன்னுடைய குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க முடிவெடுத்துள்ளதாகவும் மார்கன் கூறியுள்ளார்.
கேப்டன் தினேஷ் கார்த்திக் குறித்து பாராட்டு
கொரோனா பாதிப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தற்போது ஐபிஎல் சீசனில் கேகேஆர் அணி சார்பில் விளையாடிக் கொண்டிருந்திருப்பார் இயான் மார்கன். இதனிடையே, தன்னுடைய அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மிகவும் வியப்புக்குரிய வீரர் என்றும், அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக தான் அவருக்கு உதவுவேன் என்றும் கூறியுள்ளார். மார்கனின் இந்த கருத்து குறித்து கேகேஆர் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.