லண்டன்:தென் ஆப்ரிக்க அணியை நினைத்தால் பாவமாக இருப்பதாக இந்திய கேப்டன் கோலி தெரிவித்திருக்கிறார்.
உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா இன்று தமது முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியுடன் விளையாடுகிறது.
தென் ஆப்ரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சவுதாம்ப்டனில் நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணிகள் மோத உள்ளன. அதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென் ஆப்ரிக்க அணியுடனான போட்டிக்கு முன்பு அணியின் நிலைமை குறித்து கோலி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது: தென் ஆப்ரிக்க அணி பலமான அணி. இருப்பினும் இது போன்ற பெரிய தொடர்களில் அவர்களுக்கு ஏதாவது சிக்கல் வந்து விடுகிறது.
இப்போது, அவர்களது வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்து வருகின்றனர். நெகிடி ஏற்கனவே காயம் அடைந்துள்ளார். தற்போது ஸ்டெயின் அணியில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்
அதனால் அந்த அணியை நினைத்து எனக்கு பரிதாபமாக உள்ளது இருந்தாலும் அவர்கள் இப்போதும் மிக பலமான அணியாகவே இருக்கின்றனர். ஆகவே, அவர்களை சாதாரணமாக எடை போடாமல் முழு கவனத்துடன் ஆடி வெற்றி கணக்கை துவங்க முடிவு செய்துள்ளோம்.
போட்டியின் ஆரம்பம் முதலே அடித்து விளையாடினால் விக்கெட்களை அடுத்தடுத்து பறிகொடுக்க வாய்ப்பு உள்ளது. அதனால் 30 ஓவர்கள் வரை நிதானமாகவும், பின்னர் அதிரடியாகவும் விளையாடினால் ரன்குவிப்பு அதிகரிக்கும்.
காயம் காரணமாக உலக கோப்பை பயிற்சி போட்டிகளில் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் விளையாடாமல் இருந்தார். அவர் காயத்திலிருந்து விடுப்பட்டு விட்டதால் பங்கேற்பார்.
இந்திய அணிக்கு கேதர் ஜாதவ் திரும்பி உள்ளது அணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும். பேட்டிங்கில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவாய்ந்த அணியாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.